Published : 03 Aug 2019 07:36 AM
Last Updated : 03 Aug 2019 07:36 AM

செப்டம்பர் 30-ம் தேதி முதல் திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: அக்டோபர் 4-ல் கருட சேவை

என்.மகேஷ்குமார்

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் 30-ம் 
தேதி கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளதாக நேற்று திருமலையில் உள்ள அன்னமையா பவனில் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குவதை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகளும் இப்போதிலிருந்தே தொடங்கப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் செப்டம்பர் 30-ம் தேதி கொடியேற்றம், அக்டோபர் 4-ம் தேதி கருட சேவை, 7-ம் தேதி தேர்த்திருவிழா மற்றும் விழாவின் இறுதி நாளான 8-ம் தேதி சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதனையொட்டி, போக்குவரத்து, பாதுகாப்பு, அன்னதானம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. வரும் 
9-ம் தேதி வரலட்சுமி விரத விழா நடைபெற உள்ளதையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.  ஆகஸ்ட் மாதம் 3-ம் வாரத்திலிருந்து லட்டு பிரசாதத்திற்கு சணல் பைகள் உபயோகப்படுத்தப்படும். திருமலையில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனில் குமார் சிங்கால் கூறினார்.

திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நடந்த பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில், இணை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 18-ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசனம்  முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால், புரோட்டோக்கால் விஐபிக்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் மூலம் பல சிபாரிசு கடிதங்
கள் ரத்து செய்யப்பட்டன. ஆதலால், தினமும் 4,500 முதல் 5000 வரை சாமானிய பக்தர்கள் கூடுதலாக சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதுவே இனி தொடர்ந்து அமல்படுத்தப்படும்’’ என்றார்.

ரூ.109.60 கோடி வருமானம்

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.109.60 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட ரூ.75,009  அதிகமாகும்.  திருப்பதி ஏழுமலை யானை வரும் நவம்பர் மாதம் பக்தர்கள் பல்வேறு சேவைகள் மூலம் தரிசனம் செய்ய 69,254 ஆன்லைன் டிக்கெட்டுகளை நேற்று தேவஸ்தானம் வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x