Published : 29 Jul 2019 11:05 AM
Last Updated : 29 Jul 2019 11:05 AM
வி.ராம்ஜி
சோம வாரப் பிரதோஷத்தன்று, சிவ தரிசனம் செய்ய மறந்துவிடாதீர்கள்.
திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவனாருக்கு சோமன் என்றொரு பெயரும் உண்டு. பிறையை சிரசில் சூடிக்கொண்ட சிவனாருக்கு உரிய நாள்... திங்கட்கிழமை. அதுமட்டுமா? இன்று 29ம் தேதி பிரதோஷமும் கூட!
சோம வாரம் என்று சொல்லப்படும் திங்களன்று வரும் பிரதோஷம் விசேஷம். பொதுவாகவே பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று தரிசனம் செய்வது நல்ல நல்ல பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
அதிலும் குறிப்பாக, சோம வாரப் பிரதோஷம்.. வாழ்வில் ஒளியேற்றும்; வம்சத்தை விருத்தியாக்கும்; வளமும் நலமும் தந்து வாழச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோம வாரப் பிரதோஷமான இன்றைய தினத்தில், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதைக் கண்ணாரத் தரிசியுங்கள். முடிந்தால், அபிசேஷகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள். அதேபோல், சிவலிங்கத் திருமேனிக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெறும். இந்தநாளில் விரதமிருந்தும் சிவபெருமானைத் தரிசிக்கலாம்.
மேலும் நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். முடிந்தால், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து நான்குபேருக்கேனும் வழங்குங்கள். இன்னும் வளமாக்கி, வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தருள்வார் சிவனார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT