Published : 19 Jul 2019 10:54 AM
Last Updated : 19 Jul 2019 10:54 AM

தாலி - குங்குமம் காப்பாள் குங்குமவல்லி! 

வி.ராம்ஜி

தாலி பாக்கியம் தருவாள், மாங்கல்யத்தை நிலைக்கச் செய்வாள், நெற்றியில் எப்போதும் குங்குமம் நிறைக்கும்படியான வாழ்க்கையைத் தந்தருள்வாள் குங்குமவல்லி. அம்மனுக்கு உரிய ஆடி மாதத்தில், குங்குமவல்லியைத் தரிசியுங்கள். பெண்களின் சோகம் பொறுக்கமாட்டாள், கருணைத்தாய்! 
திருச்சி உறையூரில் அமைந்துள்ளது தான் தோன்றிஸ்வரர் ஆலயம். இங்குதான் கோயிலில் அமர்ந்தபடி, அகிலத்துப் பெண்களையும் அகிலத்தையும் காத்தருளிக் கொண்டிருக்கிறாள், குங்குமவல்லி அம்மன். 
அந்த நந்தவனத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்தபடி, ஏக்கத்துடன் மலையையே பார்த்துக் கொண்டிருந்தாள் காந்திமதி. ‘என் ஐயனே! தாயுமானவா... நேத்திக்கி வரை வலியோ வேதனையோ இல்லாம வந்து பாத்துட்டுப் போனேன். ஆனா இன்னிக்கி வலி அதிகமாயிருச்சு. முதுகுப் பக்கம் நிரந்தரமா அந்த வலி உக்காந்துருக்கு. ஆடுகால் தசையெல்லாம் இறுக்கமாயிருச்சு. பத்தடி நடந்தாலே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. இன்னிக்கி உன்னை வந்து பாக்கமுடியுமா... தெரியலை. அடுத்தடுத்த நாள்ல, பாதிதூரம் வர்றதுக்கே தெம்பு இருக்குமான்னும் தெரியலை. ஆனா உன்னைப் பாக்காம, வழிபடாம ஒருநாளும் இருந்தது இல்லியே...’ என்று தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.

காந்திமதி சாதாரணமானவள் அல்ல; சூரவதித்த சோழ மன்னனின் மனைவி. அதுமட்டுமா? நாககன்னியாக பிறந்தவள், இந்த பூமியில் மானிடராக ஜனித்தாள். இவளது அழகில் மயங்கிய மன்னன், இவளைப் பற்றி அறிந்து வியந்து, இந்திரனின் அனுமதியுடன் காந்திமதியின் கரம்பற்றினானாம்! எல்லாவற்றுக்கும் மேலாக இவள், சதாசர்வகாலமும் சதாசிவத்தையே நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். குறிப்பாக... கருவுற்ற நாள் முதல், தாயுமானவரின் மீதான பக்தி இன்னும் இன்னும் அதிகரித்தது. ‘என் சிவனே! காவிரியில் கரைபுரண்ட வெள்ளம்... கரையின் ஒருபுறம் கர்ப்பிணி மகள்; இன்னொரு பக்கத்தில் அவளுடைய அம்மா. என்ன செய்றதுன்னு தவிச்சு மருகினப்ப... அந்த அம்மாவைப் போல நீ போனியே... கர்ப்பிணிக்கு பிரசவ கால பணிவிடைகளைச் செஞ்சியே! இதனாலதானே உனக்கு தாயுமானவன்னு பேர் கிடைச்சுச்சு. என் அப்பனே... தாயுமானவா! உன்னை தரிசிக்க முடிஞ்சாலே போதும்‘ - மலையையே சிவபெருமானாக, தாயுமானவராக எண்ணி... கரம் குவித்து வணங்கினாள் காந்திமதி; மெள்ள விசும்பினாள்; பிறகு பெருங்குரலெடுத்து அழுதாள்.

அப்போது... அந்த நந்தவனம் முழுவதும் வில்வ வாசனை சூழ்ந்தது. காந்திமதி எனும் கர்ப்பிணிக்கு முன்னே ரிஷபாரூடராக, உமையவளுடன் காட்சி தந்தார் சிவனார். ‘கர்ப்பிணியான நீ இனி என்னை தரிசிக்க இவ்வளவு தொலைவு வரவேண்டாம். இதோ இங்கேயே என்னை தரிசிக்கலாம். உமையவள் உனக்குத் துணையிருப்பாள்’ என்று அருளி மறைந்தார். அந்த இடத்தில் இருந்து லிங்கமூர்த்தம் வெளிப்பட்டது. பிறகு, இங்கேயே அம்மையையும் அப்பனையும் தரிசித்து வந்தாள் காந்திமதி. அடுத்து சுகப்பிரசவம் ஆனதாகவும், அதே நிறைவுடன் அம்மைக்கும் அப்பனுக்கும் கோயில் எழுப்பி வழிபட்டாள் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.

திருச்சி உறையூரில் அமைந்துள்ளது ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம். ஆனால், சிவன் கோயில் என்றாலோ, அம்பாளின் திருநாமம் சொல்லி, குங்குமவல்லி அம்பாள் ஆலயம் என்றாலோ எவருக்கும் தெரியவில்லை. வளைகாப்பு அம்மன் கோயில் என்று கேட்டால் சட்டென்று வழிகாட்டுகின்றனர் பக்தர்கள். காந்திமதி எனும் பக்தையின் சுகப்பிரசவத்துக்கு அருளிய குங்குமவல்லியை வணங்கினால் சுகப்பிரசவம் நிச்சயம் என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணுக்கு வளைகாப்பு நடந்தாலும், முன்னதாக குங்குமவல்லிக்கு கைகள் நிறைய வளையல்களை அடுக்கி அழகு பார்த்துவிட்டுத்தான், கர்ப்பிணிக்கு வளைகாப்பு விழாவை நடத்துகின்றனர்.

தாயைப் போல் கருணையும் கனிவும் கொண்டு காட்சி தருகிறாள் குங்குமவல்லி அம்பாள். கர்ப்பிணிகள் தினமும் இவளை தரிசித்துச் செல்கின்றனர். ஆடி மாதம் வந்தாலே, எங்கிருந்தெல்லாமோ பெண்கள் இங்கு வந்து தேவியை வேண்டிச் செல்கின்றனர். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு நாட்களில், இங்கு வேண்டிக்கொண்டால், அவர்களின் கண்ணீரைத் துடைப்பாள் குங்குமவல்லி. மாங்கல்ய வரமும் தருவாள். பலமும் தந்தருள்வாள். தாலி காக்கும் குங்குமவல்லியை, குங்குமம் காக்கும் குங்குமவல்லியை கண்ணாரத் தரிசியுங்கள்! 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x