Published : 02 Jul 2015 11:00 AM
Last Updated : 02 Jul 2015 11:00 AM

கிரியாயோகம் என்ற ராஜயோகத்தின் தந்தை 2- ஆத்மா ராமனோடு ஐக்கியமாகு

இன்று உலகம் முழுவதும் அறியப்படும் கிரியா யோகத்தை அறிமுகம் செய்தவர் சியாம சரண் லாஹிரி மஹாசயர். சர்வதேச யோக தினத்தையொட்டி அவரது வாழ்க்கை மற்றும் யோக சாதனை குறித்த கட்டுரை சென்றவாரம் வெளியானது. அதன் தொடர்ச்சி இந்த வாரம் வெளியாகிறது.

கிரியா யோகம் ஆறு நிலைகளைக் கொண்டது. ஓங்கார கிரியா, கேச்சரிமுத்ரா, சாம்பவி முத்ரா, தாலவ்யம், பிராணாயாமம், நாபிக்கிரியா, யோனிமுத்ரா, மஹாமுத்ரா இந்த பாகங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்தது தான் முதல் கிரியா, மூன்றாவது கிரியாவை யோகிராஜ் சியாம சரண்லாஹிரி அவர்கள் ‘டோக்கர் கிரியா’ என்றும் நான்காவது கிரியா மூலம் நாக்கு முடிச்சு இலகுவாக மாற்றி பிராணாயாமம் மூலம் ஸ்திரப்படுத்தலாம். இரண்டாவது கிரியாவில் வாயு பூரண ஸ்திர நிலையை அடைதல். மூன்றாவது கிரியாவில் இதய முடிச்சு துளையிடப்படுகிறது.

நான்காவது கிரியாவில் பூரண ஸ்திர நிலையில், யோகி மூலாதாரத்தின் முடிச்சைத் துளையிட்டு ஆக்ஞா சக்கரத்தில் தன்னை லயப்படுத்தி வாயு ஸ்திர நிலையில் யோகி சமாதி அடைதல். ஐந்தாவது கிரியா மூலம் பிரணவநாதம், ஆறாவது கிரியா மூலம் ஸஹஸ்ராரம் அடைதல் (1,000 இதழ் தாமரை). லாஹிரி மஹாசயர் தன் பூத உடலிலிருந்து விடுதலையான பிறகு இமயத்தில் உள்ள தன் குருவான மகா அவதார் பாபாஜியுடன் பல காலங்கள் இருப்பேன் என்று தன் சீடர்களிடம் கூறிச் சென்றார். இன்றும் தன்னிடம் பக்தியுள்ள சீடர்களுக்குத் தன் பூத உடலுடன் காட்சி கொடுக்கிறார் என்பதாகக் கூறப்படுகிறது.

யோக அனுபவங்கள்

சியாம சரண் லாஹிரி புத்தக வடிவில் எந்த ஒரு நூலும் வெளியிடவில்லை. ஆனால் தன்னுடைய அனுபவங்களை 26 டைரிகளில் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும் இங்கு அப்படியே கொடுக்கப்பட்டுகின்றன.

யோகிராஜ் லாஹரி பாபா வேதாந்தம், பகவத்கீதை, உபநிஷத்துக்கள் மற்றும் தர்மநூல்கள் பற்றி அழகாக சத்சங்கம் செய்வார். தன் அன்புச் சீடர்களுடன் அதனைக் கேட்பவர்கள், சித்தம் ஒடுங்கி தன்னுணர்வு மறந்து, ஓர் வேத புருஷர் பேசுவதை முழு கவனத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

ஏ அப்பாவியே; ஏன் நீ இங்குமங்கும் அலைந்து திரிகிறாய்.

உன் தேடல் நிறைவடைய ஈஸ்வரனிடம் சரணடை. இதுவே உன் அலைச்சலை நீக்கி பரம்ஜோதியிடம் அழைத்துச் செல்லும். கூடஸ்தாவிலிருந்து உங்களை வழிநடத்திச் செல்வேன்.

ஓம்கார நாதத்தின் உள்ளே ஜோதி, அதுதான் ஆத்ம ஜோதி எனப்படுகிறது. அது ஆத்ம சூரியனிலிருந்துதான் வருகிறது. அந்த ஆத்ம சூரியனுக்குள்ளே மனம் நிலைபெற்று, ஸ்திர மனத்தில் லயமானவுடன் எந்த மாதிரியான ஒருநிலை உண்டாகிறது. அந்த நிலைதான் விஷ்ணுபதம். இதே விஷ்ணுபதத்தில் தான் பிறகு சுவாசமும் கலந்துவிடுகிறது. ஸ்திரமனம் தான் விஷ்ணுபதம் அதுதான் சுவாசமற்ற நிலை.

பிராண கர்மம் மூலம் அந்த சுவாசத்தை பின்பு அதே ஸ்திர நிலையில் கலக்கச் செய்விட வேண்டும். அவ்வாறு செய்ய முடிந்த பிறகு தான் சமாதி நிலை கிடைக்கிறது. ஆயிரம் இதழ் கொண்ட தாமரை ஸஹஸ்ர சக்கரம் அழிவற்றது. எல்லையில்லா அருட்பிரகாச ஜோதி இன்று மிக மிகத் தூய்மையாக தெரிகிறது. மேலும் நாக்கு அதிக உயரம் எழும்பி உள்நாக்கின் துவாரத்தில் நுழைந்து ஒட்டிக்கொண்டது. இந்த நிலையில் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.

இந்த நிலையில் அதிகாலை ஆகாசம் போல் மிகப் பிரகாசம் இல்லை. இருட்டாகவும் இல்லை. அந்த நிலையில் எல்லாவற்றையுமே பார்க்கிறேன். பின்பு அடுத்த நொடியில் ஒன்றுமே தெரியவில்லை. நேருக்கு நேர் பார்க்கக்கூடிய அல்லது பார்க்கப்பட வேண்டிய சூழ்நிலை எதுவுமே இல்லை. எப்பொழுது வரை பார்த்தால் - பார்க்கப்படக்கூடியது உண்டோ அதுவரைதான் த்வைதம் உள்ளது. ஆனால் எல்லாமே சேர்ந்து கலந்து சூனிய பிரம்மத்தில் ஒரே தோற்றமாகிவிடுகிறது.

அத்வைத நிலை உண்டாகிறது. அதில் அறிதல் - அறியக்கூடியது போன்றவை எதுவுமே இருப்பதில்லை. இந்த நிலையில் மனத்தை பரிபூரணமாக கலந்து, சூனிய பிரம்மத்தில் இருந்து விடுவதுதான் சமாதி நிலை. அந்த நிலையை அடைவதுதான் யோகிகளின் கடமை. இது பூரணமான கிரியா யோகப் பயிற்சி சாதனை மூலம் சித்திக்கும்.

குருவின் அருமை பெருமைகளைப் பற்றி எண்ணி தினமும் ஆத்ம சாதனையில் ஈடுபட்டு, குருவை எண்ணி ஓம்காரம் ஜபிப்பாயாக. அந்த ரகசிய உலகில் தோன்றும் ஆனந்த வெள்ளமாகிய சத், சித், ஆனந்தத்தைக் கைப்பற்றிக்கொள். ஆத்மாராமனோடு ஐக்கியமாகு. வழி தவறி நடப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து உன் சாதனையில் ஈடுபடு. அது உனக்கு நல்லது. காலப்போக்கில் அந்த ஆனந்த நிலையில் ஒன்றாகிக் கலந்துவிடுவாய்.

எல்லையற்ற அன்பு எங்கு மண்டிக் கிடக்கிறது என்று உன்னால் கூற முடியுமா? அன்பை, விரைவில் கையகப்படுத்த முடியாது. அதற்கு நீ கடுமையாக உழைக்க வேண்டும். ஒருநாள் அந்த அன்பு என்ற ஆனந்த நிலையுடன் ஒன்றாக இணைந்து விடுவாய். அப்பொழுது உன் விருப்பம் எதுவானாலும் அது சித்தியாகும்.

எப்பொழுதும் எளிமையாகவும் அமைதியாகவும் இருந்துவந்தால், அந்த நிலையான பேரின்பத்தில் திளைக்கலாம். இந்தப் பேரின்ப நிலைக்கு ஓர் எல்லையே கிடையாது. அதைக் கைப்பற்றி விட்டால் அந்த நிலையான, அசையாத, தெய்வீக நிலையை அடைய அது வழிகாட்டும். இதே அன்பை நீ பகவான்  கிருஷ்ணர் மீது வைத்தால் கூட இந்தப் பேரின்ப நிலை குன்றாது. குறையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x