Published : 04 Jun 2015 12:15 PM
Last Updated : 04 Jun 2015 12:15 PM

விவேகானந்தர் மொழி: இரண்டே வழிகள்

சக்கரத்திற்குள் சக்கரங்களாக உள்ள இந்த உலகம் ஒரு பயங்கர இயந்திரம். நாம் அதில் கையை வைத்து மாட்டிக்கொண்டோமானால் நம் கதை முடிந்தது. குறிப்பிட்டதொரு கடமையைச் செய்து முடித்ததும் ஓய்வாக இருக்கலாம் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். ஆனால் அந்தக் கடமையில் ஒரு பகுதியைச் செய்து முடிக்கும் முன்பே மற்றொரு கடமை தயாராகக் காத்திருக்கிறது. உலகமாகிய இந்த மகத்தான சிக்கலான இயந்திரத்தால் நாம் அனைவரும் இழுத்துச் செல்லப்படுகிறோம்.

இதிலிருந்து மீள இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, அந்த இயந்திரத்தைப் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அதனை அதன் போக்கில் போகவிட்டு விலகி நிற்பது, அதாவது ஆசைகளை விடுவது. சொல்வதற்கு இது மிகவும் எளிது. ஆனால் செயலுக்கு வரும்போது பெரும்பாலும் முடியவே முடியாதது. கோடியில் ஒருவரால்கூட இது முடியுமா என்பது எனக்குச் சந்தேகமே. மற்ற வழி, சம்சாரத்தில் மூழ்கி, செயலின் ரகசியத்தை அறிந்து கொள்வது.

இதுதான் கர்ம யோகத்தின் வழி, உலக இயந்திரத்தின் சக்கரங்களிலிருந்து விலகி ஓடாதீர்கள். அதனுள்ளேயே நின்று செயலின் ரகசியத்தை அறிந்துகொள்ளுங்கள். உள்ளிருந்தபடியே சரியான முறையில் வேலை செய்தால் வெளியேறவும் முடியும். வெளியேறுவதற்கான வழியும் இந்த இயந்திரத்தின் வழியாகத்தான் உள்ளது.

செயல் என்றால் என்ன என்பதைக் கண்டோம். இயற்கையின் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியே செயல். அது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கும். இறைவனை நம்புபவர்கள் இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.

நமது உதவியை எதிர்பார்க்கின்ற அளவிற்கு அவர் திறமையற்றவர் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நடந்து கொண்டிருந்தாலும், நமது லட்சியம் சுதந்திரம், நமது லட்சியம் சுயநலமின்மை. கர்ம யோகத்தின்படி, செயல் புரிவதன் மூலமாக அந்த லட்சியத்தை அடைய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x