Last Updated : 18 Jun, 2015 12:41 PM

 

Published : 18 Jun 2015 12:41 PM
Last Updated : 18 Jun 2015 12:41 PM

நர்த்தன நடராஜருக்கு ஆனந்தத் திருமஞ்சனம்

ஆனித் திருமஞ்சனம் ஜூன் 24

சிவன் அபிஷேகப் பிரியன் என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் நடராஜருக்கு அபிஷேகம் என்பது ஆனந்தத் தாண்டவம்தான். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் மிகப் பிரசித்தி. அதே நாளில் அனேக சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ராஜ சபையில் அதிகாலையில் இந்த விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேகங்கள்

ஆனி அபிஷேகம் உட்பட ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் இத்திருக் கோயிலில் விசேஷமாக நடைபெறும். அவை சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலை அபிஷேகம். ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலை அபிஷேகம். புராட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலை அபிஷேகம். மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜ சபையில் அதிகாலை அபிஷேகம். மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலை அபிஷேகம்.

நடனங்கள்

ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கரா தாண்டவம் என ஏழு தாண்டவங்கள் உள்ளன என்று சிவபெருமான் பார்வதிக்குக் கூறியதாகத் தெரிவிக்கின்றன திருப்புத்தூர் புராணச் செய்திகள். இத்திருக்கோயிலில் சிவன் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜனாக அருள்பாலிக்கிறார்.

விநாயகர்

சிவன் கோயில் என்றாலே விநாயகரை வணங்கிய பின் கோயிலின் உள்ளே செல்வது வழக்கம். விநாயகர் சிந்தனைக் கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகர் பல திருப்பெயர்கள் தாங்கிச் சிதம்பரம் கோயிலில் அருள்பாலிக்கிறார். முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சந்நிதி கொண்டு அவர்கள் திருநாமத்திற்கு ஏற்பப் பலன்களை வழங்குகிறார் என்பது ஐதீகம்.

தரிசனம் செய்ய வேண்டிய முறை

கோயில்களில் உள்ள அனைத்துச் சன்னிதிகளையும் தரிசித்து, பின்னர் அம்பாளைத் தரிசித்து, கடைசியாகத்தான் மூலவர் சிவனைத் தரிசிக்க வேண்டும். நேராக சிவனைத் தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது. எனவே இத்திருகோயில்களில் உள்ள நவக்கிரக சன்னிதி, பதஞ்சலி சந்நிதி, கம்பத்து இளையனார் சந்நிதி ஆகிய சன்னிதிகளை வணங்க வேண்டும்.

சிறப்பு

அறுபத்து மூவர் என்று சிறப்புப் பெற்ற நாயன்மார்களுள் முக்கியமானவர்கள் நால்வர் என்று சொல்லப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர். இவர்கள் நால்வரும் இத்திருத்தல நாயகன் திருமூலநாதர் மீதும், உமையாம்பிகை மீதும் பல தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.

திருப்பெயர்

இத்தலநாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோயில் என்ற திருநாமமும் இத்திருக்கோயிலுக்கு உண்டு. தில்லை, மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தில்லை கூத்தன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது இத்திருக்கோயில். சித் என்ற ஞானத்தையும், அம்பரம் என்ற ஆகாயத்தையும் குறிப்பதால் இத்தலத்தைச் சிதம்பரம் என்பார்கள். அதனால் சிதம்பரம், தில்லைக் கூத்தன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் என்றே அழைக்கப்பட்டது. பக்தர்களுக்கு இதுவே பூலோகக் கைலாயம்.

தீர்த்தங்கள்

சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் எனப் பல தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

முனிவர்கள்

சிதம்பரம் என்னும் இத்திருத்தலத்தின் சிவபெருமான் திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரால் வணங்கிப் போற்றப்பட்டவர்.

கோபுரம்

திசை நான்கிலும் கோபுரங்கள் கொண்டு, நாற்பது ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந் துள்ளது இத்திருத்தலம். கிழக்குக் கோபுரத்தில் சிவன் நூற்றியெட்டு பரதநாட்டிய முத்திரைகள் காட்டியபடி இருக்கும் சிலைகள் உள்ளன.

சபை

சபைகளுக்கும் இத்திருக்கோயிலில் குறைவில்லை. மொத்தம் ஐந்து சபைகள் உள்ளன. மூலவர் குடி கொண்ட இடம் கனக சபை. கனகம் என்றால் பொன். ஆனாலும் பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டதால் பொன்னம்பலம் என்று இது அழைக்கப்படுகிறது.

அமைப்பு

கோயில் அமைப்பும், மனிதர்களின் உடலமைப்பும் ஒன்றென எண்ணத்தக்க வகையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மனித உடல் அன்ன மயம், பிராண மயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்னும் ஐந்து கோசங்களைக் கொண்டது. அதைப் போலவே சிதம்பரம் கோயிலும் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப் பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்புறம் அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தல புராணம்.

அதிசயம்

மனித உடலை ஒத்து அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

அபூர்வம்

பிற சிவாலயங்களில் அர்த்த சாம பூஜை நிகழ்ந்த பின்னரே இவ்வாலயத்தில் சாம பூஜை நிகழ வேண்டும் என்பதற்கு ஏற்ப கால நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சிதம்பரம் நடராஜருக்கு தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காலை சந்தி, இரண்டாங்காலம், உச்சி காலம், சாயங்காலம், ரகசிய பூஜை காலம், அர்த்த சாமம் என வேளைக்கொரு பூஜை உண்டு. ஆனந்தத் தாண்டவம் ஆடி, ஆட்கொள்வார் சிதம்பர நடராஜர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x