Last Updated : 18 Jun, 2015 12:02 PM

 

Published : 18 Jun 2015 12:02 PM
Last Updated : 18 Jun 2015 12:02 PM

வைணவம் போற்றும் ஆச்சாரியன்

ஸ்ரீஅஹோபில மடம் ஸ்ரீ மத் அழகியசிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மகாதேசிகனின் சஷ்டியப்த பூர்த்தி மஹோஸ்தவம் இந்த ஆண்டு ஜூன் 22 அன்று ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறவுள்ளது. அஹோபில மடம் பீடத்தை 46 வது ஜீயராகத் தற்போது அலங்கரிக்கும் இவர், 1955-ம் ஆண்டு ஈச்சம்பாடி ஸ்ரீ உ.வே. பக்தவத்சலாசார்யார், ராஜலஷ்மி தம்பதிக்குத் தவப் புதல்வனாகப் பிறந்தார்.

இவர் திருவையாறு பாடசாலையில் சிறு வயதில் வேத அத்யயனம் பெற்றவர். சிஷா என்ற உச்சரிப்புக் கலை பற்றிய சாஸ்திரம் (phonetics), கல்பம் என்கின்ற அனுஷ்டான முறை, நியம விதிகள் பற்றிய சாஸ்திரம் (rituals), வ்யாகரணம் என்ற இலக்கணம் (grammer), சொல்லிலக்கண விவரண சாஸ்த்திரமான நிருக்தம் (etymology), யாப்பிலக்கணமான சந்தஸ் (poetic metre) மற்றும் ஜோதிஷம் முதலிய ஷடங்கம் என்பதான ஆறு வேதாந்தங்களையும் கசடறக் கற்றவர். இவரது முன்னோர்கள் 38,39,40,41 ஆகிய அழகிய சிங்கர்கள் காலத்தில் சன்னிதியில் ஆராதனை கைங்கரியங்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹோபில மடம்

அஹோபில மடம் 620 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிவண் சடகோபன் சுவாமி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. மேல்கோட்டையில் கேசவாச்சார்யாருக்கு, ஸ்ரீநிவாசாசார் என்ற ஒரு குழந்தை பிறந்தது.

இவர் காஞ்சியில் வேதம் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் இவரது கனவில் வந்த அஹோபிலம் நரசிம்மன், தன்னைத் தரிசிக்க அஹோபிலம் வருமாறு கூறினாராம். ஆழ்வார் பாசுரங்களிலேயே, `சென்று காண்டர்க்கு அரிய கோவில்’ என்று அஹோபிலத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். மிகவும் சிரமப்பட்டே அந்தக் கோயிலை அடைய முடியும் என்பதே அதன் பொருள். துஷ்ட ஜந்துக்கள் நிறைந்த அக்காட்டிற்குச் சென்றார் ஸ்ரீநிவாசாசார்யார்.

அடர்ந்த காட்டில் வழி தெரியாத அவருக்குப் பாம்பு ஒன்று வழியைக் காட்டிக்கொண்டே முன்னால் சென்றதாம். பாபநாசினி என்ற தீர்த்தக்கரையைச் சென்றடைந்தவுடன் அந்தப் பாம்பு மறைந்துவிட்டது.

பின்னர் இவர் அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு வெளியே வர, அந்த அடர் காட்டிலும் வயதான சந்நியாசி ஒருவர் அவர் முன் தோன்றி, அவருக்கு பேஷ மந்திரம் உபதேசம் செய்தார். உடனே அவர் மறைந்துவிட்டாராம். அவரே நரசிம்மப் பெருமாள் எனக் கண்டுகொண்டார் ஸ்ரீநிவாசாசார்யார். பின்னர் அங்குள்ள மாலோல நரசிம்மனைத் தரிசிக்கச் சென்றார்.

அஹோபிலம் என்ற இத்தலத்தில் மலைகளின் மீது ஒன்பது ஸ்ரீநரசிம்மர்கள் எழுந்தருளி உள்ளார்கள். இதற்கும் ஒரு புராணக் கதை உள்ளது. பிரதாப சிம்மன் என்றொரு ராஜா. அவன் தினமும் தங்கத்தால் உமா மகேஸ்வர விக்கிரகம் செய்து அதனை உடனடியாக தானம் செய்த பின் மதிய உணவு உட்கொள்ளுவான்.

இப்படியாக ஒரு நாள் அதே அச்சில் தங்கத்தை உருக்கி ஊற்றி எடுத்தால் லஷ்மி நரசிம்மராக வருகிறது. ஒரு முறையல்ல மூன்று முறை இப்படியே வருகிறது. இந்த இடம் ஸ்ரீ நரசிம்ம தலம் என்பதை உணர்ந்துகொண்ட அம்மன்னன் அது முதல் தங்க நரசிம்ம விக்கிரகத்தைத் தானம் செய்துவந்தானாம்.

அப்படித் தானமாக வந்த தங்க நரசிம்ம விக்கிரகம் இன்றும் அஹோபில மடத்தில் பூஜையில் உள்ளது எனக் கடந்த ஆண்டு ‘தி இந்து’வுக்கு அளித்த நேர்காணலின்போது ஜீயர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x