Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM

கோலாகலமாக நடந்த மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 1-ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அன்று முதல் மதுரையின் அரசியாக மீனாட்சி திகழ்ந்து வரு கிறார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், 10-ம் நாளான சனிக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் எழுந்தருளி, கோயிலைச் சுற்றி யுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கிழக்கு கோபுர வாசல் அருகே உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தனர்.

பவளக்கனிவாய் பெருமாள்

இந்தத் திருமணத்தில் பங்கேற்பதற் காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர். பின்னர் கோயிலுக்குள் வலம் வந்த அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் காலை 9.55 மணியளவில் ஒருவர் பின் ஒருவராக மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள அலங்கார மணமேடைக்கு வந்தனர்.

அப்போது, மீனாட்சிக்கு மஞ்சள் வண்ணப் பட்டும், சுந்தரேஸ்வரருக்கு பச்சை வண்ணப் பட்டும் அணிவிக்கப்பட்டிருந்தன. மணப் பெண் மீனாட்சி முத்துக்கொண்டை போட்டு வைரக்கிரீடம், மாணிக்க மூக்குத்தி, தங்கக்காசு மாலை, ஒட்டி யாணம் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார்.

மாலை மாற்றிக்கொண்டனர்

பின்னர் மந்திரங்கள் முழங்க திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமக்கள் சார்பில் கோயில் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டது. அதையடுத்து ஹோமம், மாங்கல்ய பூஜைகள் நடைபெற்ற பின் அம்மனும், சுவாமியும் மாலை மாற்றிக் கொண்டனர். பல்வேறு பூஜைகளுக்கு பின் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ் வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டினர்.

நிறைவாக மங்களவாத்தியம் முழங்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருமணம் முடிந்தவுடன் கூடியிருந்த பெண்கள் தாலியில் சந்தனம், குங்குமம் வைத்தும், நெற்றியில் பொட்டும் வைத்துக் கொண்டனர். சில பெண்கள் மீனாட்சிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட நேரத்தில் தாங்களும் புதுத்தாலி, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கானோர் மதுரையில் திரண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x