Last Updated : 29 May, 2014 11:13 AM

 

Published : 29 May 2014 11:13 AM
Last Updated : 29 May 2014 11:13 AM

பஹாய்

பஹாய் மதம் 1800களில் ஈரானில் இறைதூதர் பஹாவுல்லாஹ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. பேதங்களற்ற மனித குலமே இதன் நோக்கம். ஒவ்வொரு காலத்திலும், அந்தந்த சூழல்களுக்கு ஏற்ப இறைசெய்தியைத் தெரிவிக்கும் தூதர்கள் வருவார்கள் என்பதே பஹாவுல்லாஹ் அவர்களின் நம்பிக்கை.

பஹாய் சமயத்தைப் பொருத்தவரை இந்த உலகில் ஏற்கனவே இருக்கும் பெரிய மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்கிறது. கிருஷ்ணர், ஆபிரஹாம், புத்தர் மற்றும் முகம்மது நபி ஆகிய அனைவரையும் மகான்கள் என்று ஒப்புகொண்ட மதம் பஹாய்.

சடங்குகள் ஒவ்வொரு சமயத்துக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாமே தவிர, அடிப்படைக் கோட்பாடுகளில் அனைத்து மதங்களும் ஒரே கொள்கையுடையவைதான் என்பதே பஹாயின் கோட்பாடு. மனிதாபிமானம், சேவை, அண்டை வீட்டானையும் நேசிப்பது என்ற அம்சங்களில் அனைத்து மதங்களும் ஒத்தகருத்துள்ளவைதான்.

பஹாயைத் தோற்றுவித்த பஹாவுல்லாஹ், டெஹ்ரானில் உள்ள பெருந்தனக் குடும்பத்தில் பிறந்தவர். அரச ஆடம்பரங்களைச் சிறு வயதிலேயே துறந்த அவர் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தவர். மனித குலத்துக்கு அமைதியையும் ஒற்றுமையையும் நல்க இறைவன் அனுப்பிய தூதராகத் தன்னை உணர்ந்த ஞானி அவர். ஒரே ஒரு கடவுள், ஒரே ஒரு இனம் என்ற கொள்கையை அவர் பரப்பினார். “மனித குலம் ஒட்டுமொத்தமாக ஒரு முதிர்ச்சியை அடைந்த நிலையில் உள்ளது. அனைத்துப் பிரிவினைகளும் அகன்று மனித குலம் அனைத்தும் சேர்ந்து வாழும் தருணம் வந்துவிட்டது. பூமி அனைத்தும் ஒரு தேசமாகத் திகழ வேண்டும்.” என்று அவர் எழுதியுள்ளார்.

உலகளாவிய அளவில் பஹாய் சமயத்தைப் பரப்பவும், வளர்க்கவும் சுதந்திரமாகத் தேர்வுசெய்யப்பட்ட சபைகள் உலகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் இயங்கிவருகின்றன. கலாச்சாரப் பன்மைத்துவம் குறித்த புதிய சிந்தனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக, பொருளாதார சமநீதி, குடும்ப வாழ்வுக்கு புத்துயிர்ப்பூட்டுவது போன்றவை இதன் கொள்கைகள்.

பஹாய் சமயத்தின் முக்கியமான சாதனை என்னவெனில் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் இனரீதியாக, மொழிரீதியாக, நிற ரீதியாக, பிராந்திய ரீதியாக உட்பிரிவுகளாகப் பிளவுபடவேயில்லை.

உலகில் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் மோதல்களும் முரண்பாடுகளும் பெருகிவரும் நிலையில் பஹாய் தனது அடிப்படையான மானுட ஒற்றுமை என்னும் கொள்கையில் இன்னும் வேர்பிடித்து நிற்கிறது.

உலகிலேயே இச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம் இருக்கும் இடம் இந்தியாதான். 22 லட்சம் பேர் இச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஈரானிலும் அமெரிக்காவிலும் இந்த நம்பிக்கைக்குச் செல்வாக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x