Last Updated : 18 Apr, 2015 12:09 PM

 

Published : 18 Apr 2015 12:09 PM
Last Updated : 18 Apr 2015 12:09 PM

பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு: 3 நீதிபதிகள் அமர்வை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தீபக் மிஸ்ரா இந்த அமர்வுக்கு தலைமை வகிக்கிறார்.

மூவர் அமர்வில் இடம்பெற்றுள்ள ஆர்.கே.அகர்வால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஏப்.21-ல் விசாரணை:

பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

வழக்கு பின்னணி:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு, முரண்பட்ட தீர்ப்பால் பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வழக்கில், அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராவதற்கு தடை கோரி அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையில், நீதிபதி ஆர். பானுமதி அடங்கிய இருநபர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், அதுவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை விதித்தும் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.

முரணான தீர்ப்பு

இந்நிலையில், நேற்று அன்பழகன் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நீதிபதி மதன் பி. லோகுர், “பவானி சிங் அரசு வழக்கறிஞராக தொடர அனுமதித்தால் அது கிரிமினல் வழக்கில் நீதி பரிபாலன முறைக்கு கிடைத்த தோல்வியாகும். மேல்முறையீட்டு மனு விசாரணை முழுவதும் அதிகார பலத்தால் சிதைக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டுகள் நடைபெற்றது என்பதே, அதிகாரம் படைத்தவர்களின் தலையீடு நீதித்துறையில் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. எனவே, பவானி சிங், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவில் அரசு தரப்பில் தொடர்ந்து ஆஜராவது உகந்தது அல்ல” எனத் தீர்ப்பளித்தார்.

ஆனால், மற்றொரு நீதிபதி ஆர். பானுமதி, பவானி சிங் அரசு தரப்பில் ஆஜராவதற்கு முழு அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்தார். மேலும், “கர்நாடக அரசு கடந்த 2013 பிப்ரவரி 2-ம் தேதி அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமித்த அறிவிப்பை ரத்து செய்யும்வரை பவானி சிங் அரசுத் தரப்பு வழக்கறிஞராகத் தொடரலாம்” எனத் தெரிவித்தார்.

பெரிய அமர்வுக்கு மாற்றம்

இரு நீதிபதிகளும் தீர்ப்பில் முரண்பட்டதால், இம்மனுவை பெரிய அமர்வுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்துவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

3 பேர் கொண்ட அமர்வு:

இந்நிலையில், பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (சனிக்கிழமை) அமைக்கப்பட்டது. இந்த அமர்வில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x