Last Updated : 10 Mar, 2015 10:22 AM

 

Published : 10 Mar 2015 10:22 AM
Last Updated : 10 Mar 2015 10:22 AM

மாறுகிறதா மாலத்தீவு?- 2

நஷீத் அதிபராக இருந்தபோது மாலத்தீவு - இந்தியா இடையிலான உறவு மிகச் சிறப்பாக இருந்தது. ராடார் வசதிகளை மாலத்தீவு நாட்டின் ஊடாகச் செல்ல இந்தியாவுக்கு அனுமதியளித்தார் நஷீத். தங்களது பகுதியில் அமைதியும், பாதுகாப்பும் தொடர்ந்து நிலவ இரு நாடுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன.

எதிர்க்கட்சியான பிறகும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வருகிறது.

மாலத்தீவு களேபரம் தொடர் பாக இந்தியா கொஞ்சம் மவுனம் காத்தது. நஷீத் கைது செய்யப் பட்டது குறித்து தொடக்கத்தில் கருத்து கூறவில்லை.

மாலத்தீவு நாட்டின் வெளியுறவு அமைச்சர் துன்யா மமூன் “இந்தியா பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. எங்களது உள்நாட்டு விவகாரங்களில் அது தலையிடாது என நம்புகிறோம்’’ என்றார். சாமர்த்தியம்!

ஆனால் கருத்து சொல்ல வேண்டிய நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டது. “மாலத்தீவு நாட்டில் சமீபகாலமாக நடைபெற்று வரும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக உள்ளது. முக்கியமாக முன்னாள் அதிபர் நஷீதைக் கைது செய்ததும், அவரைத் தவறாகக் கையாண்டதும்’’ என்று அறிக்கை வெளியிட்டது இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம்.

தான் கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்ததும் தன் நாட்டி லுள்ள இந்தியத் தூதரகத்தில் முதலில் சரணடைந்தார் நஷீத். இதையே காரணம் காட்டி அவ ருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வாதாடியது அரசுத் தரப்பு.

“இங்கு நடப்பது குறித்து இந்தியா கவலைப்படுவதை நாங் கள் வரவேற்கிறோம். ஆனால் அது செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்’’ என்று கருத்துக் கூறியிருக்கிறார் நஷீத் கட்சியின் பொது மக்கள் தொடர்பாளர் ஹமீது அப்துல் கஃபூர். இந்தியாவிலிருந்து இது தொடர்பாக உடனடியாக ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இப்படி எதிர்பார்க்கும் உரிமை அவர்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டால், சில பின்னணிகளை அறிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத் தீவுகளின் தெற்கே அமைந்துள்ளது மாலத்தீவு. நம் நாடு பிரிட்டனிடமிருந்து 1947-ல் சுதந்திரம் அடைந்தது என்றால், மாலத்தீவு 1966-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போதிலிருந்தே இரு நாடுகளும் மிகுந்த நட்போடுதான் இருந்து வந்திருக்கின்றன. 1976-ல் இரு நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள நீர் எல்லைகளை சிக்கலின்றி பிரித்துக் கொண்டன.

1982-ல் ஒரு சலசலப்பு. மாலத்தீவு அதிபர் மமூன் அப்துல் கயூம் என்பவர் இந்தியாவுக்குச் சொந்தமான மினிக்காய் தீவு உண்மையில் மாலத்தீவுக்கு உரியது என்றார். பரபரப்பு கிளம்பியது. உடனடியாக மாலத்தீவு அரசு அறிக்கை வெளியிட்டது - ‘நாங்கள் மினிக்காய் தீவுக்கு உரிமை கோரவில்லை’ என்று.

பிறகு 1981-ல் இரு நாடுகளுக் கும் இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சார்க் அமைப்பு உருவானதிலிருந்தே இந்தியாவும், மாலத்தீவும் அதன் உறுப்பினர்கள்.

மாலத்தீவு இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் அருகி லுள்ள நாடு. இதையும் மனதில் கொண்டுதான் இந்தியா, மாலத்தீவு உடனான நல்லுறவைத் தொடர வேண்டியிருக்கிறது. 1988 நவம்பரில் இலங்கையிலிருந்து ஆயுதங்களுடன் 80 தமிழ் ஈழத்துக்கான மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவில் ஊடுருவினார்கள்.

மாலே நகரிலுள்ள விமான நிலை யத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்களது மற்றொரு முக்கிய நோக்கமான `அதிபர் முமூன் அப்துல் கயூமைக் கைது செய்வது’ என்பதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார்.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ராஜீவ்காந்தி. மாலத்தீவு அரசுக்கு ஆதரவாக 1600 ராணுவ வீரர்களை அனுப்பினார். மாலத்தீவு அரசு உதவி கோரிய அரை நாளிலேயே அந்த உதவி அளிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே மாலத்தீவு அரசைப் பற்றியிருந்த ஆபத்து நீங்கியது. இலங்கை தீவிரவாதிகளை இந்திய ராணுவம் ஒடுக்கியது.

‘இன்னொரு நாட்டின் ஊடுரு வல்’ என்று இந்தியாவை அப் போது பிற நாடுகள் விமர்சிக்க வில்லை. மாறாக இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப் போதைய அமெரிக்க அதிபர் ரீகன், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ இந்தியா மதிக்கத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது’’ என்றார்.

“ மாலத்தீவு ஆட்சி காப்பாற்றப் பட்டது. எங்களால் ராணுவத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு அனுப்பியிருக்க முடியாது. இந்தியாவுக்கு நன்றி’’ என்றார் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர்.

சோவியத் யூனியன், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இந்தியாவின் உதவியைப் பெரிதும் பாராட்டின.

இதற்குப் பிறகு இந்தியாவும், மாலத்தீவும் மேலும் நெருக்க மாயின. இலங்கை அரசுடன் உரசல்கள் ஏற்படும்போதெல்லாம் இந்தியாவின் ஆதரவைப் பெரிதும் நம்பி வந்தது மாலத்தீவு.

இந்திய அரசின் பொருளா தார உதவியுடன் மாலத்தீவின் கட்டமைப்புகள் விரிவாக்கப்பட் டன. தலைநகர் மாலேவில் இந்திராகாந்தி நினைவு மருத்துவ மனை எழுப்பப்பட்டது.

ஏப்ரல் 2006-ல் இந்திய கடற் படை ஒரு மிகச்சிறந்த போர்க்கப் பலை மாலத்தீவுக்குப் பரிசாக அளித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோள் காரணமாக இந்தியா அந்த நாட்டில் தனது 2 ஹெலிகாப்டர்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்தது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டா என்பதை இந்த ஹெலி காப்டர்கள் அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருக்கும். மாலத்தீவின் முழுக் கடல் எல்லைகளையும் பாதுகாப்பதற் கான ஒரு திட்டத்தையும் இந்தியா வடிவமைத்ததுடன், செயல்படுத்துதலிலும் இறங்கியது. ஆனால் இந்த நல்லுற வில் உண்டானது ஒரு பெரிய பின்னடைவு.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x