பூனையின் கனவு: ஓஷோ சொன்ன கதை

பூனையின் கனவு: ஓஷோ சொன்ன கதை
Updated on
1 min read

மரக்கிளை ஒன்றின் மேல் இருந்த பூனை ஒன்று களுக்கென்று சிரித்தது. மரத்தடியில் படுத்திருந்த நாய், பூனையிடம், “முட்டாளே! என்ன விஷயம்?” என்று கேட்டது. பூனை சொன்னது. “இன்று எனக்கு அருமையான மதியத் தூக்கம். தூக்கத்தில் ஒரு கனவும் கண்டேன்.

கனவில் மழை பெய்தது. அடைமழை. என்ன அதிசயம் என்றால் அது எலி மழை. தண்ணீருக்குப் பதில், எலிகளை வானம் பொழிந்துகொண்டு இருந்தது”. நாக்கைச் சப்பிக்கொண்டு தனது கனவில் ஆழ்ந்தது பூனை.

நாய்க்கோ கடும் கோபம். “அடிமுட்டாள்! இதென்ன பைத்தியக்காரத்தனம். எங்களது புனித நூல்களும் மழையைப் பற்றி பேசுகின்றன. அவற்றைப் பொறுத்தவரை ஒரு அதிசய மழை பெய்யும். அந்த மழையில் எலிகள் பொழியாது. பூனைகள்தான் மழையாக விழும்”.

ஒரு நாய் எதைச் சிந்திக்குமோ அதைப் பூனை சிந்திக்காது. அவற்றால் கருத்தொற்றுமையும் காணமுடியாது.

ஒருவர் எலியைத் தனது கனவில் காணுகிறாரெனில் அவர் பூனையாகவே இருப்பார். இதற்கெல்லாம் பெரிய தர்க்கம் அவசியமே இல்லை. இதுதான் இக்கதையின் நீதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in