Published : 18 Mar 2015 05:18 PM
Last Updated : 18 Mar 2015 05:18 PM

எட்டாக்கனியாகும் ஆரோக்கிய உணவு: சத்தான உணவு கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எப்.கென்னடி 1967ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நுகர்வோர் உரிமைகளை பிரகடனப்படுத்தினார். 1983-ம் ஆண்டு முதல் ஜ.நா சபையில் உள்ள உறுப்பு நாடுகள் நுகர்வோர் தினத்தை அதே மார்ச் 15-ம் தேதி கொண்டாடத் தொடங்கின.

ஒரு பொருளையோ அல்லது சேவையையோ பணம் கொடுத்து பெறும் நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இச்சட்டத்தின் நோக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையப் பொருளை முன்னிருத்தி உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நுகர்வோர் சர்வதேசியம் `ஆரோக்கியமான உணவு’ என்பதை கருப்பொருளாக அறிவித்துள்ளது.

ஆரோக்கியமான உணவை நுகர்வோருக்கு கொடுப்பது அரசின் கடமை. ஆனால் அரசு அதில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய கிரியேட் அமைப்பை சேர்ந்த பொன்னம்பலம் கூறுகையில், `இந்தியா வில் 1950-ல் 30 மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, தற்போது 267 மில்லியன் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சத்தான உணவு கிடைக்கிறதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்தியாவில் 42 சதவீத குழந்தைகள் சத்துணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாகவும், சத்தான உணவு கிடைக்காத உலகில் 5 குழந்தைகளில் இந்தியக் குழந்தையும் ஒன்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அரசும் இதைத் தவிர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பாஸ்ட்புட் கலாச்சாரம் மேலோங்கியதன் விளைவாக மனித உடல் நோய்களின் கூடாரமாக மாறி நிற்கிறது. இதனால் தான் சிறுவயதிலேயே அதீத உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் பெருகுகின்றன.

இன்றைக்கு விவசாயம் முழுக்க ரசாயன மயமாகி விட்டது. இதனால் சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகள் ரசாயன உரம் கொட்டியும், பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்துமே விளைவிக்கப்படுகின்றன. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, சட்டீஸ்கர், ஆந்திரா மாநிலங்களில் இயற்கை வேளாண்மை கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழக அரசும் இயற்கை வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டும்.

பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் இந்த ஆண்டு நுகர்வோர் தினத்தை கொண்டாடுவதில் அர்த்தம் இருக்கும்” என்றார்.

இந்த ஆண்டு நுகர்வோர் சர்வதேசியம் `ஆரோக்கியமான உணவு’ என்பதை கருப்பொருளாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x