Published : 12 Feb 2015 01:13 PM
Last Updated : 12 Feb 2015 01:13 PM

ஆன்மிகச் சுற்றுலா: தியானம் செய்யும் சிவன்

கரவல்லி என்றும் கானரா என்றும் இப்பிரதேசம் அழைக்கப்படுகிறது. மங்களூரிலிருந்து கார்வார் வரை நீளும் கர்நாடக கடற்கரையோரத்தில் இருக்கிறது. இங்கே பொதிந்து கிடக்கும் பொக்கிஷங்கள் பல. இங்கு ரயில் பாதை உருவான பின்னர் சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வந்த இடங்களில் ஒன்றுதான் முர்தேஷ்வர்.

மிகப் பெரிய சிவன் சிலை

மங்களூரிலிருந்து கோவா செல்லும் ரயிலில் ஏறி முர்தேஷ்வர் நிலையத்தில் இறங்குகிறோம். ஸ்டேஷனிலிருந்து நேராக ஒரு கோடு போட்டால், அது கடற்கரையில் போய் முடியும்.அங்குதான் ஒரு சிறிய குன்றின் மேல் கோயிலும் உள்ளது. இங்கு எல்லாமே பிரம்மாண்டமாகத்தான் தெரிகின்றன. கோயிலின் அருகிலேயே ஒரு மேட்டுப்பாங்கான பகுதியில் சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது.

உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது. கோயிலுக்கு முன்னால் மிகப் பெரிய ராஜ கோபுரம் உள்ளது. கன்துகா என்ற குன்றின் மேல் கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்துக்கு செப்பனிடப்பட்ட சாலை உள்ளது. கோபுரம் மற்றும் சில இடங்களில் தங்கக் கவசங்கள் மின்னுகின்றன.உள்ளே மூலவர் அகோர மூர்த்தியாய் காட்சிதருகிறார். கீழே பழமையான லிங்கமும் ஆவுடையாரும் உள்ளனர்.

கைலாயம் வந்த ராவணன்

இந்த ஒரு கதை உண்டு. ஒருசமயம் ராவணன் சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற வேண்டிக் கைலாயம் சென்று கடுந்தவம் புரிந்தான். அவரும் ஒரு நிபந்தனையுடன் அதைக் கொடுத்தார். அதை அவன் கையில் தாங்கிச் செல்ல வேண்டும். தவறிக் கீழே வைத்தால் அது வைத்த இடத்திலேயே புதையுண்டு விடும் .

ராவணனும் மிகுந்த பக்தியுடன் லிங்கத்தை எடுத்துக்கொண்டு இலங்கையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். இது தேவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏனென்றால், அதை அவன் இலங்கையில் வைத்தால் எவரும் வெல்ல முடியாதவனாகி விடுவான். இதை முறியடிக்க விஷ்ணுவின் உதவியுடன் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ராவணன் கோகர்ணா என்ற இடத்தை அடைந்தபோது, திருமால் தன்னுடைய சக்ராயுதத்தினால் சூரியனை மறைத்தார். பொழுது சாய்ந்துவிட்டது என்று நினைத்து ராவணன் சந்தியாவந்தனம் செய்ய முற்பட்டான்.

லிங்கத்தைக் கீழே வைக்க முடியாதே! தூரத்தில் ஒரு அந்தணச் சிறுவன் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவனை அழைத்து விஷயத்தைச் சொன்னான். அவனும் ஒரு நிபந்தனை போட்டான். "குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு மூன்று முறை அழைப்பேன் . நீர் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன்" என்று சொன்னான். ராவணனால் வர முடியவில்லை. சிறுவனும் ஒரு நல்ல நேரம் பார்த்துக் கீழே லிங்கத்தை வைத்துவிட்டான். ஓடி வந்தான் ராவணன். சுதர்சனர் விலகினார். கதிரவனின் ஒளி படர்ந்தது.

ராவணனுக்கு தேவர்களின் நாடகம் புரிந்தது. ஆவேசமடைந்து உறையை ஒரு பக்கம் எறிந்தான். மூடியை இன்னொரு பக்கம் எறிந்தான். சுற்றியிருந்த வஸ்திரத்தை மற்றொரு பக்கம் எறிந்தான். ஒவ்வொன்றும் ஒரு லிங்கமாக மாறிப் புனிதத் தலமாக உருப்பெற்றது. வஸ்திரம் விழுந்த இடம் அகோர மூர்த்தியாக ம்ருதேஷவர் என்று ஆகியது. கடற்கரை அருகில் ஒரு மலையின் மீது விழுந்தது. அதுதான் கண்டுக மலை.

புனிதமும் சுற்றுலாவும் சேர்ந்த தலம்

கோயிலில் கணபதி, அனுமன், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் போன்ற துணை தெய்வங்களுக்கும் தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன. ஆலயத்துக்குப் பின்னால் இரு அழகான தீர்த்தங்கள் (குளங்கள்) உள்ளன.

தொடுவானத்தின் எல்லையற்ற காட்சிகளும் , வெண்மையான மணல் துகள்களில் நுரை பொங்கப் பரவும் நீரும் எல்லைக் கோடு போல் அணி வகுத்து அசையும் பனை மற்றும் தென்னை மரங்களும்தான் நம் துணை. தியானம் செய்வதற்கும் கற்பனைகளைத் தட்டி விடுவதற்கும் இதைவிடச் சிறந்த இடம் அமைவது அரிது.

தினமும் காலையில் இதன் அழகைப் பருகுவதற்குக் கூட்டம் அலை மோதுகிறது புனிதமும் சுற்றுலாவும் ஒன்றுசேர்ந்த இடம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x