Published : 24 Dec 2014 10:17 AM
Last Updated : 24 Dec 2014 10:17 AM
போர்க்குற்ற வழக்கில் வங்கதேச முன்னாள் வேளாண் அமைச்சர் சையது முகமது கெய்சருக்கு (73) நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1971 மார்ச் 25-ம் தேதி பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச விடுதலைக்காகப் போராடியவர்களை பாகிஸ்தான் ஆதரவு அரசியல் தலைவர்கள் படுகொலை செய்தனர்.
இந்த போர்க் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதுவரை பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் சையது முகமது கெய்சருக்கு சிறப்பு தீர்ப்பாயம் நேற்று மரண தண்டனை விதித்தது.
கெய்சர் பஹானி என்ற அமைப்பைத் தொடங்கிய அவர் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு உறுதுணையாகச் செயல்பட்டார். இனப் படுகொலை, பாலியல் பலாத்காரம், வீடுகளை சூறையாடியது உட்பட அவர் மீது மொத்தம் 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 14 வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாக சிறப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அதன்படி 7 வழக்குகளில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 4 வழக்குகளில் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் 3 வழக்குகளில் முறையே 10, 7, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT