முத்துப்போல முப்பது பாடல்கள்

முத்துப்போல முப்பது பாடல்கள்
Updated on
1 min read

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. அந்த சிறந்த மாதத்தைக் குறிக்கும் முதல் பாசுரம் உட்பட முப்பது பாசுரங்களால் அழகு சேர்த்தவர் ஆண்டாள். இதனை ஆண்டுதோறும் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர் எம்.எல்.வசந்தகுமாரி. சங்கீத கலாநிதி விருது பெற்றவர். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் இவரை நாடி வந்தது.

எம்.எல்.வசந்தகுமாரியின் குரல், வசந்தத்தைக் கூவி அழைக்கும் குயிலின் குரலைப் போன்றது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர் இரண்டு உலகங்களை தன் குரல் இனிமையால் ஆண்டார். கர்நாடக இசை உலகம் மற்றும் திரையிசை உலகம். இசை என்னும் தேருக்கு இந்த இரட்டைக் குதிரை சவாரி அவருக்கு இத்துறையில் வேகமாக முன்னேற பெரிதும் உதவியது. இவ்விரண்டு இசை துறையுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு அவரை புகழ் உச்சிக்குக் கொண்டு சென்றன.

எம்.எல்வி.யின் சீடர்கள்

இந்தப் புகழ் அவர் மறைந்த பின்னும் மங்காமல் இருக்கக் காரணம் அவரது சிஷ்யர்கள்தான். குறிப்பாக அவர் கூடவே சிறு வயது முதல் மேடைக் கச்சேரி செய்த இன்றைய சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன். தனது மகள் ஸ்ரீவித்யாவையும் கர்நாடக இசைப்பாடகியாக இவர் உருவாக்கி இருந்தாலும், ஸ்ரீவித்யாவின் விருப்பம் நடிப்புத் துறையாக இருந்ததால், அவரது பாதை வேறாக மாறிவிட்டது.

அந்நேரத்தில் இசை என்ற தூணை இறுகப் பிடித்துக் கொண்டார் எம்.எல்.வசந்தகுமாரி. தன் திறமை அனைத்தையும் வஞ்சனை இன்றி தன் சிஷ்யர்களுக்கு அளித்தார். பன்மொழிப் படங்களில் பாடியதால் இவரது புகழ் இந்தியா முழுவதும் பரவியது.

எம்.எல்.வி.யின் குரு

பிரபல கர்நாடக இசைப்பாடகர் ஜி.என்.பி.யிடம் இசையைக் கற்ற இவரின் குரல் சங்கீத வித்வான் திரை இசை வித்தகர் ஜி. ராமனாதனுக்குப் பிடித்துவிட்டது. இவர் இசையமைத்த திரைபடங்களில் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இவரது இசையில் எம்.எல்.வி. பாடுவது வழக்கமாக ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில்தான் புரந்தரதாசரின் பாடல்களைப் பாடி பிரபலப்படுத்தவும், பிரபலமடையவும் தொடங்கினார்.

இளமைப்பருவத்திலேயே அரங்கேற்றம்

இவரது தந்தை அய்யாசாமி ஐயர் சிறந்த பாடகர், தாய் லலிதாங்கியோ அந்நாளிலேயே தனது இசையால் புகழ் பெற்று இருந்தார். இசைப் பாரம்பரியத்தில் பிறந்த இவரை சிறிய வயதிலேயே சிறந்த பாடகி ஆக்க முடியும் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர் ஜி.என்.பி.

இசைதான் தனக்கேற்ற துறை என்பதை அறிந்திருந்தார் எம்.எல்.வி. அவரது முதல் தனிக் கச்சேரி அரங்கேறியபொழுது மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற எம்.எல்.வியின் வயது பன்னிரெண்டுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in