Last Updated : 30 Jun, 2019 10:28 AM

 

Published : 30 Jun 2019 10:28 AM
Last Updated : 30 Jun 2019 10:28 AM

வந்தாச்சு அத்தி வரதர்!

நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை அத்தி வரதரின் தரிசனம். நகரேஷு காஞ்சி என்று போற்றப்படும், காஞ்சி மாநகரில், இந்த அற்புதத் தரிசனம் நாளை முதல் தொடங்குகிறது. நகரேஷு காஞ்சி என்றால், நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று அர்த்தம்.

அத்தி வரதர்... அத்தி மரத்தால் ஆன வரதர். அது கிருதயுகம். விஸ்வகர்மா, கிருதயுகத்தில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட மூர்த்தம். நான்கு மூர்த்தங்களில் இந்த மூர்த்தமும் ஒன்று. காஞ்சி மாநகரில், வரதராஜ பெருமாள் கோயிலில், புண்ய கோடி விமானத்தின் கீழே மூலவராக சேவை சாதித்தார் அத்தி வரதர். கிட்டத்தட்ட, 16ம் நூற்றாண்டு வரை இவரே இங்கு மூலவராக தரிசனம் தந்தார் என்கிறது ஸ்தல வரலாறு.

அந்நியப் படையெடுப்பின் போது, மூல மூர்த்தங்களையும் உத்ஸவ மூர்த்தங்களையும் எதிர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, கோயில் குளத்தினுள் உத்ஸவரான அத்தி வரதர் மறைத்து வைக்கப்பட்டார். இந்த விஷயம்... கோயிலுக்குத் தொடர்பு உடைய ஒரேயொரு குடும்பத்துக்கு மட்டுமே தெரியும் வகையில் ரகசியம் பாதுகாக்கப்பட்டது. அந்த சமயத்தில், 40 ஆண்டுகளாக, மூலவரே இல்லாமல், பூஜைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது ஆலயம்.

 இந்தநிலையில், ரகசியம் அறிந்த கோயில் தர்மகர்த்தா குடும்பத்து சகோதரர்கள் (தத்தாச்சார்யர் குடும்பம்) இறந்துவிட, அவர்களின் மகன்கள் அத்தி வரதர் இருக்கும் இடம் தெரியாமல், தேடும் பணியில் இறங்கினார்கள். பிறகு உடையார்பாளையம் எனும் ஊரின் வனப்பகுதியில், உத்ஸவ மூர்த்திகளைக் கண்டெடுத்தனர். கோயிலுக்குக் கொண்டுவந்து பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள்.

இதேசமயத்தில், காஞ்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய சீவரம் எனும் ஊரில் உள்ள மலையில், கல்லால் வடிக்கப்பட்ட தேவராஜ சுவாமியை, அத்தி வரதர் போலவே இருக்கிறாரே என வியந்து, எடுத்து வந்தனர். கோயிலின் மூலஸ்தானத்தில், அத்தி வரதர் இருந்த இடத்தில் இவரை வைத்து, பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அன்று முதல் வரதராஜ பெருமாள் கோயிலில், பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களப்படத் தொடங்கின.

1709ம் வருடத்தில், அந்த அதிசயம் நடந்தது. எப்போதும் வற்றவே வற்றாத கோயிலின் குளம் வற்றியது. ஒரு சொட்டு நீர் கூட இல்லாத நிலையில், அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் பிரதட்சணமானார். காட்சி தந்து அருளினார். ஊரே கூடி தரிசித்தது. வியந்தது. பிறகு, ‘அத்தி வரதர், இப்போது போலவே கோயில் திருக்குளத்தில் இருக்கட்டும். 40 வருடங்களுக்கு ஒருமுறை எடுத்து வெளியே கொண்டுவந்து, 48 நாட்கள் பூஜை செய்வது என்றும் அப்போதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படியே, 40 வருடங்களுக்கு ஒருமுறை அத்தி வரதர் நீரில் இருந்து வெளியே கொண்டுவரப்படுகிறார். அவருக்கு விமரிசையாக பூஜைகள் நடக்கின்றன. இதோ... 1979ம் ஆண்டுக்குப் பிறகு, 40 வருடங்கள் கழித்து, 2019ம் ஆண்டில், அத்தி வரதர் திருக்காட்சி தருகிறார். கோயில் புஷ்கரணியில் இருந்து வெளியே வந்த அத்தி வரதரைத் தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள், இப்போதே தயாராகிவிட்டனர்.’

நாளை ஜூலை 1ம் தேதி முதல், அற்புதமான அத்தி வரதரை அழகுறத் தரிசனம் செய்ய இருக்கிறார்கள் பக்தர்கள்.

அத்தி வரதா சரணம் சரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x