Last Updated : 20 Nov, 2014 11:51 AM

 

Published : 20 Nov 2014 11:51 AM
Last Updated : 20 Nov 2014 11:51 AM

உலகம் முழுமைக்குமான சமயம்

உலகம் முழுமைக்கும் உள்ள மனித குலத்திற்கான ஒரே சமயம் என முன்னிறுதப்பட்ட சமயம்தான் பஹாய் (bahai). இது 19 -ம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் தோன்றியது. இச்சமயத்தை நிறுவியவர் பஹா ‘உல்’ லா. இன்று இந்தியா உள்ளிட்ட 200க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 60 லட்சம் பேர் இச்சமயத்தைப் பின்பற்றிவருகின்றனர். புதுடெல்லியில் உள்ள தாமரைக் கோயில் (Lotus Temple) பஹாய் சமயத்தின் பிரசித்து பெற்ற வழிபாட்டுத் தலம்.

‘நானே கடவுள்’ - பஹா ‘உல்’ லா

பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் பஹா ‘உல்’ லா. இவர் பாரசீக நாட்டில் தெஹ்ரா என்னும் நகரத்தில் 1817-ம் ஆண்டில் பிறந்தார். மிர்சா உசேயின் அலி இவரது இயற்பெயர். இவரது தந்தை பாரசீக ஷா மன்னரின் அரசவையில் அமைச்சராக இருந்தார். பஹா ‘உல்’ லா, பிள்ளைப் பிராயத்திலேயே இறையியலில் ஆர்வத்துடன் இருந்தார். உலக சமயங்களின் இறையியல் நூல்களைத் தேடிப் படித்தார். அந்தக் காலகட்டத்தில் பாரசீகத்தில் எழுச்சிப் பெற்றுக்கொண்டிருந்த பாப் சமய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அதன் தலைவரான பாப் என்ற சிறப்பு அடைப்பெயர் கொண்டவரைக் கடவுளாக ஏற்று அந்தச் சமயத்தில் இணைந்தார் பஹா உல் லா. அவரின் முன்னணி சீடராகவும் அவர் விளங்கினார்.

ஆனால் மர்மமான முறையில் பாப் திடீரெனக் கொல்லப்பட, அதன் சதிச் செயலுக்குக் காரணமானவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு பஹா உல் லா கைது செய்யப்பட்டார். தெஹ்ரான் நகரின் பாதாளச் சிறையில் இருட்டறையில் அவர் அடைக்கப்பட்டார். வெளிச்சம் நுழையாத அந்த இருட்டறைக்குள் கனமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தபோது அவர் மனத்தில் உழன்றுகொண்டிருந்த ஆன்மிகக் கேள்விகளுக்கு விடை கண்டார். உள்ளத்தில் ஆன்மிக ஜோதி வெளிப்பட்டது.

அவர் தோற்றுவித்த பஹாய் சமயம் குறித்த எண்ணமும் அவருக்கு அங்குதான் தோன்றியது. அவரை விடுவிக்க ரஷ்யா முயன்றது. விடுவிக்கப்பட்ட உடன் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அதன்படி அவர் ஈராக்கிற்கு நாடுகடத்தப் பட்டார். அப்போது ஈராக், ஒட்டோமான் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அங்குச் சென்று 1863-ம் ஆண்டு வரை பாக்தாத் நகரத்தில் வசித்தார். அங்கு அவருக்குப் பெருகிய ஆதரவைப் பொறுக்காத அரசு அவரை வெளியேற்றியது. அதே ஆண்டு ஏப்ரலில் டைகிரிஸ் நதிக் கரையிலுள்ள ரித்வான் தோட்டம் அருகில் பஹா உல் லாவின் குரு பாப் அறிவித்ததைப் போல, “நானே கடவுள்” எனப் பகிரங்கமாக அறிவித்தார். அதை உலக அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும் என ஆதாரங்களுடன் விளக்கினார். இதனால் ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளானர். இறுதியாக இஸ்ரேலின் வடபகுதியில் உள்ள ஆக்கா என்னும் குற்றவாளிகள் நகரில் சிறைவைக்கப்பட்டார். தன் இறுதிக் காலம்வரை அங்கு வாழ்ந்து உயிர் துறந்தார்.

பஹா உல் லாவின் மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இவர்களின் மகன்களான அப்தூல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஹ்டி ஆகியோர் தங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு இச்சமயத்தைப் பரப்பும் அரும் பணிக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர்.

பஹாயின் கருத்துகள்

பஹாய் சமயம் மூன்று முக்கிய கருத்துகளைப் போதிக்கிறது; ஒரே கடவுள், சமயங்களின் ஒற்றுமை, மனிதகுலத்தின் ஒற்றுமை. அதாவது இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனித குலத்திற்கான இறைவனின் விருப்பம் எனவும் சொல்கிறது இச்சமயம்.

இச்சமயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடிய ஆட்சி மன்றங்கள் உண்டு. இம்மன்றங்களின் மூலம் ஓர் உலகச் சமூகத்தை உருவாக்க இச்சமயத்தின் விசுவாசிகள் முயல்கின்றனர். பல்வேறு வகையில் பாகுபட்டுக் கிடக்கும் மனித குலத்தை ஒரு குடையின் கீழ் இணைப்பதுதான் இச்சமயத்தின் பிரதான நோக்கம்.

ஆண், பெண் சமத்துவத்தைப் பேண வேண்டும் என்றும் ஏழை/பணக்காரர் பேதத்தைக் களைய வேண்டும் என்றும் பஹாய் வலியுறுத்துகிறது. மனித குலம் முழுமைக்கும் கல்வி கிடைக்க வழிசெய்ய வேண்டும், சுற்றுச் சூழலுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் இடையே சமநிலை பேணப் பட வேண்டும் என்றும் அந்தச் சமயம் கூறுகிறது. மனித குலம் முழுமைக்குமான ஓர் உலகக் கூட்டரசை நிறுவ வேண்டும் என்பது இதன் நோக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x