Last Updated : 17 Aug, 2017 10:11 AM

 

Published : 17 Aug 2017 10:11 AM
Last Updated : 17 Aug 2017 10:11 AM

இஸ்லாம் வாழ்வியல்: சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடு

ருமுறை நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் நபிகளாரின் இல்லத்திலிருக்கும்போது அவருடைய தாயார், அங்கு விளையாடிய குழந்தையை அழைத்து “என்னிடம் வந்தால் உனக்கொன்றைத் தருவேன்..!”என்று என்னை அழைத்தார்.

அப்போது நபிகளார், “குழந்தைக்கு என்ன தரப்போகிறீர்களம்மா..?” என்று விசாரித்தார்.

“பேரீச்சம் பழம் தரப் போகிறேன் இறைவனின் தூதரே!”என்றார் அப்துல்லாஹ்வின் தாயார்.

“ஞாபகமிருக்கட்டும்... ஒருவேளை பேரீச்சம் பழத்தைக் குழந்தைக்குத் தரவில்லை என்றால் நீங்கள் பொய் சொன்னதாக இறைவனிடம் பதியப்படும்” என்று நபிகளார் அறிவுறுத்தினாராம்.

ஒரு குழந்தையை அழைப்பதற்காகக்கூட எதையாவது தருகிறேன் என்று சொல்லி அதைத் தராமலிருப்பது ஏமாற்றுச் செயலாகும் என்று பெற்றோரை இஸ்லாம் எச்சரிக்கிறது. குழந்தைகளின் உள்ளங்களில் நேர்மை, உண்மையின் விதைகளை அதிகதிகமாகத் தூவுங்கள் என்றே அது தனது பின்பற்றாளர்களை எச்சரிக்கிறது.

குழந்தைகள் பொய்மையின் நிழல்கூடப் படாதவர்களாகத் திகழ்ந்து, உண்மையாளர்களாக வளர்ந்து, நேர்மையான உருவங்களில் வாழ்ந்து, சொல்லாலும் செயலாலும் வாய்மையாளர்களாகச் சமூகத்தில் உலா வர வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. குழந்தை வளர்ப்பில் பொய் பெரும் பாவம் என்று அறிவுறுத்துவதோடு, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இளந்தலைமுறையினர், நேர்மையாளர்களாகவே இருக்க வேண்டும் என்பது அதன் அழுத்தான கட்டளையாகும்.

பொய் பொய்யாகவே எழுதப்படும்

நபித்தோழி அஸ்மா பின்த் யஜீத் மற்றொரு சம்பவத்தைப் பதிவு செய்கிறார்:

நான் ஒருமுறை நபிகளாரிடம், “பெண்களாகிய எங்களில் சிலர் ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டும் அதன் மீது ஆசை இல்லை என்று கூறுவதும் பொய்யாகுமா இறைவனின் திருத்தூதரே?” என்று கேட்டேன். அதற்கு நபிகளார், “பொய்... பொய்யாகவே எழுதப்படும்!”என்று பதிலளித்தார்.

சமூக அமைப்பில் பொய் எங்கெல்லாம் உலா வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி நபிகளார் அறிவுறுத்தியுள்ளார். அதன் உருவாக்கத்தைக் கடுமையாகக் கண்டித்தும் உள்ளார். பொய்யைப் பிரயோகிப்பவர்களுக்குத் தண்டனை காத்திருக்கிறது என்று எச்சரித்தும் உள்ளார். இதன் விளைவாக ஒரு சாதாரணப் பணியாள்கூட மக்களைத் தவறாக வழி நடத்த முடியாது. ஒரு சாமானியன்கூட உண்மையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

வேடிக்கைப் பேச்சில், தவறான தகவல்களைத் தருவதிலோ கற்பனையாக மிகைப்படக் கூறுவதிலோ தவறு என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். வேடிக்கையாகப் பேசுவதில் ஒரு தவறும் இல்லை. அதேநேரத்தில் இந்த வேடிக்கையும் சிரிப்புகளும் வாய்மை என்ற வரம்புகளுக்குள்ளாகவே இருக்க வேண்டும். பொய் எப்போதும் பொய்தான். உண்மை பொய்யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது.

“வேடிக்கையில் ஈடுபட்ட நிலையிலும், பொய்யைவிட்டு விலகி இருப்பவனுக்கு சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடு உண்டு என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்று நபிகள் கூறியிருக்கிறார்.

வேடிக்கை, விவாதங்களில் பொய் சொல்வதைத் துறக்காதவரை ஒருவர் தனது இறைநம்பிக்கையில் முழுமை பெற முடியாது. அவர் மற்றைய விவகாரங்கள் அனைத்திலும் உண்மையாக இருந்தாலும் சரியே..!

வேடிக்கைப் பேச்சுகள் எல்லா நிலைகளிலும் சிரிப்பூட்டுவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x