Published : 12 Sep 2013 04:05 PM
Last Updated : 12 Sep 2013 04:05 PM

சரணாகதி மகத்துவம்!

சரணாகதி என்றாலே வைணவம்தான் நினைவுக்கு வரும். அந்தத் தத்துவத்தால் வைணவத்துக்கு மகத்துவம் என்பதைவிட, வைணவம் என்றாலே 'சரணாகதி'தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

உலகில் உள்ள ஜீவாத்மாக்கள் ஒருபுறம்; அவற்றைப் படைத்த பரமாத்மா மறுபுறம். ஜீவாத்மாக்களுக்கு முக்தி தந்து அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான் சரணாகதி. மேலோட்டமாகப் பார்த்தால், ஆண்டான் - அடிமை உறவோ என்று எண்ணத் தோன்றும். அப்படியல்ல.

ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் ஆகிய மூன்றில் எதேனும் ஒன்றின் மூலம் அல்லது அனைத்தின் மூலமும் பரமாத்மாவை அடைவது எளிது. 'மாமேகம் சரணம் வ்ரஜு' என்று கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார். நானே அனைத்தும் என்று உணர்வாய், உணர்ந்து சரண் அடைவாய், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.

ஆனால், இந்த சரணாகதியை நேரடியாக ஒருவரால் அடைய முடியாது. ஆசார்யன் என்ற‌ வழிகாட்டி அவசியம். அவர்தான் பரிபூரண பிரம்மத்தை அனுபவிப்பதற்கான சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர முடியும்.

இறவனைச் சரண்புகுவதன் நோக்கமே பிறப்பு - இற‌ப்பு என்ற இடையறாத சங்கிலித் தொடரிலிருந்து விடுதலை பெறுவதுதான். இதை மோட்சம் என்பார்கள். மோட்சத்தை விரும்புகிறவர்களை முமூக்ஷி என்பார்கள். அவர் தன்னைப் போன்ற மோட்ச விரும்பிகளுடன் சேர்ந்து இறைவனுக்கு மேலுலகில் கைங்கர்யம் செய்வர். சரணாகதி என்பது தனக்கென்று எதையும் கருதாமல் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, பலனை எதிர்பாராமல் காரியங்களை நிறைவாகச் செய்வதாகும். நல்லது, கெட்டது எதுவென்று ஆய்ந்து தீயவற்றை விலக்கிக்கொள்ள வேண்டும். உலகாயதமான வஷயங்களில் மனதை ஈடுபடுத்தாமல் ஈஸ்வர தியானத்திலேயே மூழ்க வேண்டும்.

சுகங்களில் நித்யம், அநித்யம் உண்டென்று உணர்ந்து அவற்றை விலக்க வேண்டும். அமைதியாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் வாழ வேண்டும். இறைவன் யார், நாம் யார், மோட்சம் என்றால் என்ன, அதை எப்படி அடைவது, மோட்சம் அடைந்தால் ஏற்படும் பலன்கள் அல்ல; மோட்சத்தை அடையவிடாமல் தடுக்கும் காம, குரோத, லோபமான விரோதிகள் யார் என்று அவர்களை அடையாளம் காண வேண்டும். அதற்கு தவ சீலரான குரு தேவை. அவருடைய ஆசியினால் மட்டுமே பிரபன்னனான ஜீவாத்மா, பிரபத்தி என்னும் நிலையை அடைய முடியும்.

'மன்னனும் நானே... மக்களும் நானே... செடி- கொடி - மரங்களும் நானே' என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார்.

'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம்... உமக்கே நாம் ஆட் செய்வோம்' என்று திருப்பாவை பாசுரத்தில் சரணாகதியைச் சுருக்கமாகத் தெரிவிக்கிறார் கோதைநாச்சியார்.

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்' என்றும், 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்' என்றும் வள்ளுவப் பெருந்தகை சரணாகதி என்பது அடிபணிவது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

சரணாகதி என்றாலே நினைவுக்கு வருவது விபீஷண சரணாகதிதான். தன்னைத் துயரத்துக்குள்ளாக்கிய ராவணனின் தம்பிதான் விபீஷணன் என்று தெரிந்தும், சரண் புகுந்தவனைக் காப்பாற்றுகிறான் ராமன். மனிதனாக அவதாரம் செய்தாலும், சரண் புகுந்தாரைக் காக்கும் இறைத்தன்மையை மறக்கவில்லை ராமன் என்பதே இதன் சிறப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x