Published : 21 Apr 2016 12:22 PM
Last Updated : 21 Apr 2016 12:22 PM

துன்முகி வருட ராசி பலன்கள் (துலாம் முதல் மீனம் வரை)

இந்த வருடத்தை சமஸ்கிருத ஜோதிட நூல்கள் துன்முகி எனவும், தமிழ் ஜோதிட நூல்கள் துன்முகி எனவும் குறிப்பிடுகின்றன. துன்முகி தேவதையானவள் கலியுக மக்களிடையே இருக்கக் கூடிய கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் போக்குவதற்காக சற்றே கோர முகத்துடன் தோன்றி மக்களுக்கு நாலாவித நன்மைகளையும் நல்குபவளாக இருப்பாள்.

துன்முகி வருட வெண்பா இது.

“மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே

தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான

குஜர தேசத்தில் குறைதீர வே விளையும்

அச்சமில்லை வெள்ளையரி தாம்”

என்ற இடைக்காடர் சித்தர் பெருமான் பாடலின்படி இந்த வருடம் உலகெங்கும் மழை பொழியும். மண்வளம் அதிகமாகும். விவசாயம் தழைக்கும். தானியங்கள் பெருகுவதுடன் பால் உற்பத்தியும் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். துன்முகி வருடத்தின் ராஜாவாகவும், தான்யாதிபதியாகவும் சுக்கிரனும், மந்திரியாகவும், மேகாதிபதியாகவும், அர்க்காதிபதியாகவும் புதனும், ரசாதிபதியாக சந்திரனும், நீரசாதிபதியாக சனியும் வருகிறார்கள்.

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மன்னிக்கும் குணம் கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, இந்தத் துன்முகி வருடம் பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். மழலை பாக்கியம் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் கேது 5-ம் இடத்திலேயே இந்த ஆண்டு முழுக்கத் தொடர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணத்தை அன்பால் அரவணைத்துப் போங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். மாப்பிள்ளை வீட்டாரை நன்கு விசாரித்து திருமணம் செய்விப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மலையாளம், இந்தி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். இந்தப் புத்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாகச் தொடர்வதால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக்கூடச் சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. பார்வைக் கோளாறு ஏற்படும். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குருபகவான் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் வீண் விரயம், பொருள் இழப்பு, தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் இருக்கும். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.

உங்கள் ராசிநாதனின் நட்புக் கிரகமான ராகு இந்த வருடம் முழுக்க உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வாழ்க்கைத் துணை வகையில் உதவிகள் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் சாதகமாகும்.

விருச்சிகம்

சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே! சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். விலை உயர்ந்த மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். 01.08.2016 வரை குரு 10-ல் தொடர்வதால் அடுத்தடுத்த வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். சின்னச்சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வங்கிக்கணக்கில் போதிய பணம் இருக்கிறதாவென்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடியும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும்.

பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரம், நகையை மீட்பீர்கள். புதுவேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் உங்களுடைய ராசிக்கு 12-ல் மறைவதால் செலவினங்கள் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பசியின்மை, தூக்கமின்மை வந்துபோகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். இந்த வருடம் முழுக்க ஜென்மச் சனி தொடர்வதால் படபடப்பு, ஆழ்ந்த உறக்கமின்மை, அசதி, சோர்வு, ஒற்றைத் தலைவலி, ஹார்மோன் பிரச்சினை, பசியின்மை வந்து நீங்கும்.

துரித உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள் வேண்டாம். நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்தில் சச்சரவுகள் வரக்கூடும். யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-லும் தொடர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வரக்கூடும். வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். சொத்து வரி, வருமான வரிகளையெல்லாம் தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துபோகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்குப் பணஉதவிகள் கிடைக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கனிவாகப் பழகுங்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகும். உங்களை விடத் தகுதியில் குறைந்தவர்கள், அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிகாரிகளுடன் மோதல்கள் வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். சம்பளப்பாக்கி, சலுகைகளையெல்லாம் போராடிப் பெறுவீர்கள். சித்திரை, ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.

ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்றிருப்பதால் இழந்த சொத்தை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வீட்டு மனை வாங்குவீர்கள். ஆகஸ்டு மாதம் முதல் குரு சாதகமாவதால் அந்தஸ்து ஒருபடி உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

தனுசு

கற்பூரப் புத்தி உள்ளவர்களே! இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 01.08.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால் வீடு, மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். உங்கள் பலவீனத்தைப் பயன்படுத்திச் சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களைத் தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். பெயர், புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் வரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் நிரந்தரமற்ற சூழ்நிலை உருவாகும். சில நேரங்களில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுப் போல ஆழ்மனதில் ஒரு வெறுமை, வெறுப்பு வந்து செல்லும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. இந்த துன்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் பதற்றம் வந்துபோகும். அவருடன் பிணக்குகள் வரும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். ஆனால் கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். இந்த வருடம் முழுவதுமாக சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரையச் சனியாகத் தொடர்ந்து கொண்டிருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

முன்பின் தெரியாதவர்களிடம் குடும்பத்து அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். 02.08.2016 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால் உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். அடிக்கடி இடமாற்றம் வரும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். வைகாசி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் வேலைச்சுமை குறையும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

சந்திரனும், ராசிநாதனான குருவும் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் தைரியமாக, தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேது சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். வீடு, வாகனம் சேரும். புதிய பொறுப்புகள், பதவிகள் ஏற்பீர்கள்.

மகரம்

அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களே! செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் தொட்ட காரியம் துலங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். இந்த துன்முகி வருடம் உங்களுக்கு 6-வது ராசியில் பிறப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு 8-லும், கேது 2-ம் இடத்திலும் நீடிப்பதால் பேச்சால் பிரச்னைகள் வரும். சேமிப்புகள் கரையும். கண் எரிச்சல், பல் வலி வந்து போகும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து போகும். வறட்டு கவுரவத்திற்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இந்த துன்முகி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் யோகம் உண்டாகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பழுதான குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், தொலைக்காட்சி போன்ற மின்சார சாதனங்களை மாற்றிப் புதியதை வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 01.08.2016 வரை குரு பகவான் 8-ல் மறைந்திருப்பதால் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.

ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். எந்த வேலையாக இருந்தாலும் இடைத்தரகர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாகப் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனி, ஐப்பசி மாதங்களில் புதுச் சலுகைகளும், சம்பள உயர்வும் தடையின்றிக் கிட்டும்.

ஆகஸ்டு மாதம் முதல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் உயரும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். வழக்கில் வெற்றி உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள்.

கும்பம்

புதுமை விரும்பிகளே! இந்தப் புத்தாண்டு உங்களின் 5-ம் வீட்டில் பிறப்பதால் புதிய யோசனைகள் மனதில் உதயமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர்களின் ஆதரவு பெருகும். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும். என்றாலும் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். 01.08.2016 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கல்யாணப் பேச்சு வார்த்தை நல்லவிதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் உதவிகள் கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கைக்கு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்.

தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். களவுபயம் வரக்கூடும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 9-ல் அமர்வதால் பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருடப் பிறப்பு முதல் இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் ராகுவும், ஜென்ம ராசியிலேயே கேதுவும் தொடர்வதால் விஷப் பூச்சிக்கடி, வயிற்றுப் புண், ஒவ்வாமை, முடி உதிர்தல், தலைசுற்றல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகளெல்லாம் வந்துபோகும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும்.

எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டிவரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரிகள் குறைத்து மதிப்பிடக்கூடும். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். சித்திரை, ஆடி மாதங்களில் அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராசிநாதன் சனி பகவான் கேந்திர பலம் பெற்றிருப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். யோகாதிபதிகள் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் மதிப்பார்கள். வீடு மாறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும்.

மீனம்

தொடங்கியதை முடிக்காமல் தூங்காதவர்களே! இந்த துன்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் பிறப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வீட்டைப் புதுப்பிப்பது, கூடுதல் அறை அல்லது தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் நோய் குணமாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புதியதை வாங்குவீர்கள். இந்தாண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்று மொழி, மதம், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். என்றாலும் கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் சூட்சுமத்தை உணருவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சில நாட்கள் தூக்கம் குறையும். நட்பு வட்டம் விரிவடையும். 01.08.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அவ்வப்போது சோர்வாகவும், களைப்பாகவும் காணப்படுவீர்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். காய்ச்சல் வரக்கூடும். நெடுங்காலமாக உங்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துகொள்வார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தப்பாருங்கள். உங்களைப் பற்றி சிலர் தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, பொருள் இழப்புகள் ஏற்படக்கூடும்.

எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் ராசிக்கு 9-ல் நிற்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசை இப்போது நிறைவேறும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆவணி, தை மாதங்களில் சிலருக்கு அயல்நாட்டில் உத்யோகம் அமைய வாய்ப்பிருக்கிறது.

ராகுவால் பழைய கடன் தீரும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக முடிப்பீர்கள். சொத்து சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x