Published : 11 Aug 2016 11:10 AM
Last Updated : 11 Aug 2016 11:10 AM
ஒரு மரத்தில் அழகிய இறகுகள் கொண்ட இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று மிகுந்த நேசம் பாராட்டுகின்றன. ஒன்று பழங்களைத் தின்கிறது. மற்றொன்று உண்ணாமல் கம்பீரமாக அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை மாறி மாறி இனிப்பும் கசப்புமான பழங்களைத் தின்பதால் அதற்கேற்ப மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறது. ஆனால் மேலே அமர்ந்திருக்கின்ற பறவையோ அமைதியாக, கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. அது இனிப்பையும் உண்ணவில்லை. கசப்பையும் தின்னவில்லை. எனவே சுகம், துக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மகிமையிலேயே ஆழ்ந்திருக்கிறது.
மனிதனின் நிலை இதுதான். வாழ்க்கை தரும் இனிப்பும் கசப்புமான பழங்களை உண்கிறான். பணத்தை நாடி, புலன் இன்பங்களைத் தேடி, வாழ்க்கையின் நிலையற்ற இன்பங்களைத் தேடி, பைத்தியக்காரத்தனமாக, வெறித்தனமாக, இடையீடின்றி ஓடிக்கொண்டிருக்கிறான். சில இடங்களில் ஆன்மாவைத் தேர்ப்பாகனுக்கும், புலன்களைக் கட்டுக்கடங்காத வெறிபிடித்த குதிரைகளுக்கும் உபநிடதங்கள் ஒப்பிடுகின்றன.
குழந்தைகள் ஒளிமயமான இன்பக் கனவுகளில் மிதப்பதும், பின்பு அவை அனைத்தும் வீண் எனக் காண்பதும், வயதானவர்கள் தங்கள் கடந்தகாலச் செயல்களை அசைபோடுவதும், இந்த மாய வலையிலிருந்து வெளியேறிச் செல்ல முடியாமல் திண்டாடுவதுமாக இருக்கிறார்கள். நிலையற்ற இன்பங்களை நாடி ஓடுகிற மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. இதுதான் உலகம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT