Published : 04 Aug 2016 10:18 AM
Last Updated : 04 Aug 2016 10:18 AM

அக்கரையில் வாசிக்கப்பட்ட தெய்வத்தின் குரல்

நியூஜெர்சி காஞ்சிப் பெரியவர் 82- வது ஜெயந்தி

அமெரிக்காவில் காஞ்சி மடத்தின் பக்தர்கள் ஒன்றுகூடி ‘காஞ்சி காமகோடி சேவா அறக்கட்டளை (KKSF USA)' மூலம், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக காஞ்சி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி விழாவை, அங்குள்ள பிரதான நகரங்களில் நடத்தி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மகாபெரியவர் ஜெயந்தி, பெரியவர் ஜெயந்தி, பால பெரியவர் ஜெயந்தி, மகாபெரியவர் வார்ஷிக ஆராதனை என நான்கு மஹோத்சவங்களை, KKSF நியுஜெர்சி கிளை நடத்தி வருகிறது.

ஸ்ரீகாமாட்சி அம்மனின் அருளாலும், பூஜ்ய ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கராச்சாரியாரின் அருளாலும், கடந்த ஜூலை 24-ம் தேதி, ஞாயிற்றுகிழமையன்று காஞ்சிப் பெரியவரின் 82- வது ஜெயந்தி மஹோத்ஸவம், நியுஜெர்சி எடிசன் ஸ்ரீகிருஷ்ண வ்ருந்தாவனக் கோயிலில் நடைபெற்றது. குரு வந்தனம், ஸ்வஸ்தி வசனம், ஸ்ரீமஹாகணபதி பூஜை, ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மகாபெரியவர் பாதுகா பூஜை, புதிய பெரியவர் பாதுகா பூஜை, அஷ்டோத்தர அர்ச்சனை (சிவன், காமாட்சி அம்மன், ஆதி சங்கரர், மகாபெரியவர், புதிய பெரியவர்) என சம்பிரதாயமாக ஜெயந்தி விழா நடந்தேறியது. பல குழந்தைகள் திரு ரா.கணபதி அவர்கள் தொகுத்து எழுதிய காஞ்சி மகாபெரியவரின் `தெய்வத்தின் குரல்’ (ஆங்கிலத்தில் Voice of God) புத்தகத்திலிருந்து சில அத்தியாயங்களை வாசித்தனர். குழந்தைகள் ‘தெய்வத்தின் குரல்’ அத்தியாயங்களைப் படிப்பது KKSF நடத்தும் ஒவ்வொரு ஜெயந்தியிலும் பிரதான நிகழ்வாகத் திகழ்கிறது.

மேலும், புதிய பெரியவரின் 82- வது ஜெயந்தியையொட்டி, KKSF நியுஜெர்சி சார்பில், நியுஜெர்சி ப்ரின்ஸ்டன் ஸ்ரீதுர்கா கோயிலில் கடந்த ஜூலை 23-ம் தேதி, சனிக்கிழமையன்று சண்டி ஹோமம் நடைபெற்றது. சென்னை பாஸ்கர பிரகாஷ ஆஸ்ரமத்தைச் (ஸ்ரீவித்யா பீடம்) சேர்ந்த ஸ்ரீகே.ஆர்.யக்னரத்தினம் அவர்கள் தலைமையில் இந்த ஸ்ரீசண்டி ஹோமம் நடைப்பெற்றது. குரு வந்தனம், மஹாகணபதி பூஜை, சண்டிகா ஹோமம், வடு பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, பூர்ணாஹுதி, வஸோர்தாரா, மங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x