Published : 08 Sep 2016 10:50 AM
Last Updated : 08 Sep 2016 10:50 AM

தெய்வத்தின் குரல்: பசு பாதுகாப்பு ஒவ்வொருவரின் பிறவிக் கடமை

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும். தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக் கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்திவந்தார்கள்.

மாட்டுக்கு ஒரு பிடி என்பதை “கோ க்ராஸம்'' என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு “க்ராஸ்'' என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாகவும், தார் ரோடாகவும் மாறிவருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் அகத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, தியாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இதுகூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும்போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்? அப்படிப் போடாமல், சிலர் வீடுவீடாகப் போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்' பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் காரியம் நடந்தது. இப்போதும்கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.

உண்டி வாயிலே மெக்கானிக்கலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ண வேண்டியதுதான். ஆனாலும் இப்படி மெக்கானிக்கலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற நிறைவே அலாதி என்று தெரியும். சேவையிலே இதுதான் முக்கியமான அம்சம். அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.

சேவை செய்கிறவர்கள் சங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, சேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது? ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், சேவையால் அந்த ஈஸ்வரத்துவத்தை அனுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் சேவையின் சாரம்.

கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம் வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்ய வேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை - தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு சமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்.

ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில்கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத துவேஷங்களைத் தூண்டிவிட்டிருந்தார்கள். எந்த சர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால் கோமாதாவுக்கு ஹானி இல்லை.

இதிலே நாம் குஜராத்தி, மார்வாரிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கோபாலகிருஷ்ணன் வாசம் பண்ணின பிரதேசமானதால் போலிருக்கிறது இவர்களுக்கு கோ ரக்ஷணத்தில் அலாதிப் பற்று இருக்கிறது.

முன்காலங்களில் ‘பசு மடம்' என்று வைத்து நம் கிராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்தத் தர்மத்தில் பிற்பாடு நாம் சிரத்தை இழந்துவிட்டோம். ஆனால் “பிஞ்சரபோல்”, கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்?

கோ வதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் பிரயோஜனமில்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம். அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.



‘பஞ்சகவ்யம்’ என்றால் என்ன?

‘கவ்யம்’ (gavyam) என்றால் கோ சம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட ஐந்து சேர்ந்ததே பஞ்சகவ்யம். அதில் மூன்று பாலும், பாலிலிருந்து பெறுகிற தயிரும், நெய்யுமாகும். பாக்கி இரண்டு? இங்கேதான் எதிரிடையானவையும் வருகின்றன. கோமியமும், கோமூத்திரமும்தான் அந்தப் பாக்கி இரண்டு. பால், தயிர், நெய், கோமூத்திரம், கோமயம் என்ற ஐந்தையும் கலந்து செய்வது பஞ்ச கவ்யம்.

கோவிலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து சாணி வரையில் எல்லாமும் நம் வியாதிகளைப் போக்கிப் புஷ்டியைத் தருகின்றன. பாபத்தைப் போக்கி ஆத்மாவைக் கடைத்தேற்றவும் செய்கின்றன.

பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய இந்த எல்லாவற்றுக்கும் இருக்கிறது நாலு சிறப்புக்கள். ஒன்று, அவை வாய்க்கு ருசியாக இருக்கின்றன. இரண்டு, உடம்புக்குப் புஷ்டி அளிக்கின்றன. மூன்று, ஆகாரமாக இருப்பதோடு மருந்தாகவும் இருக்கின்றன. நாலு, வைதிக பிரயோஜனம் உடையவையாக இருந்துகொண்டு பாபத்தைப் போக்கி ஆத்மாவை ரக்ஷித்துக் கொடுக்கின்றன.

கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம் வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்ய வேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை - தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு சமதையான கடமை.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x