Published : 29 Jan 2015 12:42 PM
Last Updated : 29 Jan 2015 12:42 PM

வார ராசிபலன் 29-1-2015 முதல் 4-2-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் சுக்கிரனுடன் உலவுவது சிறப்பு. சூரியன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் குடும்பத்தில் குதூகலம் நிலவும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தாய் நலம் சீராகும். பேச்சில் இனிமை கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். முக வசீகரம் கூடும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். விளையாட்டு, விநோதங்களிலும், போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். புதிய பதவி, பட்டங்கள் வாரப் பின்பகுதியில் கிடைக்கும்.

சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ளவும் அதனால் பயன் பெறவும் சந்தர்ப்பம் கூடிவரும். கடுமையாக உழைத்துப் பாடுபடுபவர்களுக்கு அதிகம் பயன் கிடைக்கும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள்,, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வாழ்க்கைத்துணையாலும் தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, ப்ப்ரவரி 2, 3.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம், சிவப்பு.

எண்கள்: 1, 4, 6, 9.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது நல்லது. வயோதிகர்களுக்கு உதவி செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 8-ல் வக்கிர புதனும், 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. பணப் புழக்கம் சற்று அதிகரிக்கும் நேரமிது. நல்ல தகவல் வந்து சேரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். செயற்கரிய காரியங்களையும் சுலபமாக நிறைவேற்றி வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்களைத் தீட்டி வைத்துக் கொள்ளலாம். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.

நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். தொழிலில் இடமாற்றம் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு கூடும். தியானம், யோகா ஆகியவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் சில இடர்பாடுகள் உண்டாகும். அவர்களது நடத்தையில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் ஓரளவுக்கு உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2, 3.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 7, 9.

பரிகாரம்: ராகுவுக்கும் ராகுவுக்கு அதிதேவதையான துர்கைக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 9-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களால் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள் லாபம் தரும். பிள்ளைகளால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.

ஆன்மிகவாதிகள் நற்பெயர் பெறுவார்கள். பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். 4-ல் ராகுவும் 8-ல் சூரியனும் இருப்பதால் தந்தை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். அரசுப்பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சனி 6-ல் இருப்பதால் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாரப் பின் பகுதியில் பண வரவு அதிகரிக்கும். முக்கியமான ஓரிரு காரியங்களும் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். நல்லோர் தொடர்பு கிட்டும். அதனால் அனுகூலமும் ஏற்படும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2, 3.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7, 8.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. சிவ, சக்தி வழிபாடு நலம் தரும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் புதன், 8-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். மனைவியாலும், கூட்டாளிகளாலும் நலம் உண்டாகும். சுகம் பெருகும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும்.

ஜன்ம ராசியில் குரு வக்கிரமாக இருப்பதாலும், 5-ல் சனி உலவுவதாலும், செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதாலும் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். வயிறு, தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தொழில் ரீதியாகச் சில இடர்பாடுகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். எதிலும் வேகம் கூடாது. விவேகம் அவசியம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2, 3.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், கறுப்பு, பச்சை, இளநீலம்.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபடுவது நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிப்பது சிறப்பு.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் 6-லும், வக்கிர குரு 12-லும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளைக் கடந்து வெளிவருவீர்கள். முக்கியப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

நல்ல காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 2-ல் ராகு, 8-ல் கேது, 4-ல் சனி இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். சுகம் குறையும். பிற மொழி, மத, இனக்காரர்களால் தொல்லைகள் சூழும். வீண்வம்பு வேண்டாம். மார்பு, இதயம் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன்-மனைவி உறவு நிலை ஒருநாள் போல் மறுநாளிராது. விட்டுக் கொடுத்துப் பழகி வருவது நல்லது. பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கும் பெண்களுக்கும் பிரச்சினைகள் சூழும். விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3.

பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 4-ல் புதன், 6-ல் செவ்வாய், 11-ல் குரு உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நல்ல தகவல் வந்து சேரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய முயற்சிகள் கைகூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும்.

இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். கடனாகக் கேட்டிருந்த பணமும் இப்போது கிடைக்கும். ராகு, கேது, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. பெண்களால் தொல்லைகள் சூழும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் நலனில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் பங்குதாரர்களை நம்பி முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்கலாகாது.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2, 3.

திசைகள்: வடக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 8, 9.

பரிகாரம்: விநாயகர், துர்கையை வழிபடுவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும். சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x