Published : 23 Feb 2017 09:48 AM
Last Updated : 23 Feb 2017 09:48 AM

சமணம்: முழுதுணர் அறிவு பெற்ற கள்வர்

ஒரு நகரத்தில் ஒரு பெரியவரும் அவர் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்.அந்தப் பெரியவருக்கு சில இரவுகளில் தூக்கமின்மை இருக்கும். அந்நேரங்களில் அவர் ஆன்மிகப் புத்தகங்களைப் படிப்பார் அல்லது தியானத்தில் மூழ்கிவிடுவார்.

அப்படியான ஒரு இரவில், அவர் தியானத்தில் அமர்ந்து விட்டார். நள்ளிரவில் நான்கு திருடர்கள் வந்தனர். அவர்களின் முணு முணுப்பு பெரியவர் காதில் விழுந்தது. வீட்டினுள் திருடர்கள் நுழைந்துள்ளனர் என்பதை உணர்ந்தார். அவரோ அவர்களை சத்தம்போட்டு விரட்டுவதற்கு முயலாமல் தியானத்திலேயே அமர்ந்திருந்தார்.

ஒரு திருடன் வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் மூட்டையாகக் கட்டி வெளியே எறிந்தான். அந்நேரத்தில் பெரியவர் சமண மந்திரமான நவ்கர் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார். “நமோ அரஹந்தாணம்” என்றார். உடனே நான்குத் திருடர்களும் அதிர்ச்சியுடன் வியப்புற்றனர். அவர்கள் அமைதியாக ‘நமோ அரஹந்தாணம்’என்கிற வார்த்தைகளைக் கவனித்தார்கள்.இதனை எங்கோ கேட்டதாக உணர்ந்தார்கள். அவ்வார்த்தைகள் அவர்களுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. சில மணித்துளிகளில் அவர்களுக்கு முற்பிறவியின் நினைவு தோன்றியது.

அவர்கள் முந்தைய பிறவியில் சமணர்களாக வாழ்ந்ததும் அப்பொழுது இந்த மந்திரத்தை போற்றியதும் அவர்களும் தியானத்தில் இருந்ததையும் உணர்ந்தார்கள். திருடர்கள் தங்களின் திருட்டுத் தொழிலை அப்பொழுதே கை விட்டனர்.

கேவலி ஞானம்

புனிதமான தியானத்தை மேற்கொண்டனர். எப்பொழுது அவர்கள் முழு மனதுடன்,ஈடுபாட்டுடன் தியானத்தில் மூழ்கினரோ அப்பொழுதே நான்கு திருடர்களின் வினைகள் அழிந்தன. கேவலிஞானமான முழுதுணர் அறிவு அடைந்தார்கள். பெரியவர் தியானம் முடிந்து பார்க்கும் போது, கள்வர்கள் கேவலிகளாக பொற்றாமரை மீது அமர்ந்திருந்தனர். பெரியவர் மிகவும் வியப்புற்று அவர்களைப் போற்றி வணங்கினார். ஒருவர் தன் தவறுகளை உணர்ந்து பாவங்களை அழித்து நல்லறத்தை முழுமனதுடன் மேற்கொண்டால், அவர் நற்கதியை அடைவார் என்று பகவான் மகாவீரர் அருளியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x