ஆன்மிக நூலகம்: ஸ்ரீராமானுஜர் - சித்திரம் பேசும் வாழ்க்கை வரலாறு

ஆன்மிக நூலகம்: ஸ்ரீராமானுஜர் - சித்திரம் பேசும் வாழ்க்கை வரலாறு

Published on

‘இராமானுஜர் வைணவ மாநிதி என்று தமிழிலும் Life history of Ramanujar A pictorial Depiction` என்று ஆங்கிலத்திலும் தலைப்பிடப்பட்டு ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மும்மொழிப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

காபி டேபிள் புக் என்று சொல்லத்தக்க வகையில் வடிவமைப்பு, எழுத்து, வண்ணம், காகிதம், அச்சுத் தரம் என அனைத்து விதங்களிலும் மிக உயர்ந்த தரம் கொண்ட புத்தகம் இது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முனைவர் மா. வீரசண்முகமணி தலைமையில், உறுப்பினர்களான கூடுதல் ஆணையர்கள் என். திருமகள் (பொது) மற்றும் எம்.கவிதா (திருப்பணி), ஒருங்கிணைப்பாளர் இப்புத்தக ஆசிரியர் முனைவர் சசிகுமார் ஆகியோர் கொண்ட குழு இந்நூலைச் சிறப்பாக உருவாக்கியுள்ளது. அரசு வெளியீடான இப்புத்தகம் சிந்தையை மயக்கும் கலைநயம், சிந்தனையைத் தூண்டும் உள்ளடக்கம் ஆகியவற்றுடன் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்கிறது.

இப்புத்தகத்தின் தமிழ், தெலுங்கு, ஆங்கிலப் மொழி பகுதிகளை முறையே பி.மூர்த்தி, முனைவர் நடராஜன், ராமநாதன் நாகசாமி ஆகியோர், எளிதாகப் புரியும் வண்ணம் எழுத்தாக்கம் செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலில், ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நூற்றியெட்டு தனித்தனி ஓவியங்களாகச் சட்டமிடப்பட்டு சுவரில் அணிவகுத்துள்ளன. இவை மராட்டியர் காலத்து பாணியில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவை எனக் கூறுகிறார்கள். இந்த ஓவியங்கள் இப்புத்தகத்தில் தெளிவாக, நன்கு புலப்படும் வண்ணம் அட்டை முதல் அனைத்துப் பக்கங்களிலும் அருமையாக எடுத்தாளப்பட்டுள்ளன.

வெளியீடு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை
விலை: ரூ.600
கிடைக்குமிடங்கள்: அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர்.
அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in