Last Updated : 28 Nov, 2013 12:00 AM

 

Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

எல்லாருக்குமான சூரியன்

யோகா என்பது ஆற்றல் வடிவம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகள், படைப்பின் ரகசியங்களைப் புரிந்து கொள்வதற்கு யோகத்தைக் கடைபிடித்தனர். அவர்கள் கண்டுபிடித்த உண்மைகளையே பின்னர் நவீன அறிவியல் மறுகண்டுபிடிப்பைச் செய்தது.

1905 இல் ஆல்பரட் ஐன்ஸ்டீன் E=mc2 என்ற சமன்பாட்டைக் கண்டறிந்தார். படைப்பு என்பது ஆற்றலைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதே அவரது கண்டுபிடிப்பு. ஆற்றல் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவம் எடுக்க முடியுமே தவிர அதை அழிக்க முடியாது. படைப்புச் செயல்பாட்டைப் பொருத்தவரை எல்லாப் பொருட்களும் ஆற்றலின் வடிவங்கள்தான். மாற்றம்தான் இங்கு நியதி. எதுவும் புதிதாகப் பிறப்பதில்லை.

இந்த மாற்றத்திற்கு மூலம் யார்? நமது மூதாதையர்கள் அதை எண்ணமாகப் பார்த்தார்கள். எண்ணத்தை ஆற்றல் தொடர்கிறது. ஒரு அணுகுண்டு முதலில் எண்ணத்தில்தான் இருந்தது. அதேபோலவே விமானமும் முதலில் பறக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து உருவானதே. படைப்பின் அடிப்படையே ஒரு எண்ணம்தான். அனுபவத்தை அடைவதற்கான ஆசைதான். இந்த எண்ணம்தான் மாதா ஆதிசக்தியை உருவாக்கியது. அவளிடமிருந்தே மும்மூர்த்திகளும் உருவானார்கள்.

ஒரு எண்ணத்தின் அடியில் பிறக்காத செயலின் கரு உள்ளது. நமது எண்ணங்கள், நடவடிக்கைகள், செயல்கள் அனைத்தும் அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு எதிர்வினைகளும் உண்டு. இதுதான் கர்ம விதி என்பதை வேத ரிஷிகள் உணர்ந்திருந்தனர். நியூட்டனின் மூன்றாம் விதி இதன் இன்னொரு வடிவமே.

நமது எண்ணங்களை நாம் ஊன்றிப் பார்த்தோமென்றால் அதுவும் நம்மிலிருந்து உருவாவதில்லை. அவை பிரபஞ்ச வெளியில் நீந்திக்கொண்டிருக்கின்றன. நமது தனிப்பட்ட அதிர்வலைகளின் தன்மையைப் பொருத்து, நமது இயல்பைப் பொருத்து அவற்றைப் பிடித்துக்கொள்கிறோம். பசித்த மனிதன் பூமியில் அமைதியை உருவாக்குவான் என்று எதிர்பார்க்க முடியாது. உணவை எப்படியாவது சம்பாதிப்பதில்தான் அவன் நாட்டம் சென்றபடி இருக்கும். நமது எண்ணங்கள் நமது ஆசையால் நிர்வகிக்கப்படுபவை. நமது ஆசைகளிலிருந்து எண்ணத்தை விடுவித்து உறையச் செய்வதே யோக சாதனையின் நோக்கம். அதை “யோக: சித்த வ்ருத்தி நிரோத:” (மனதில் எழும் சலனங்களை நிறுத்துதலே யோகம்) என் யோக சாஸ்திரம் சொல்கிறது. இப்படி நிறுத்துவதற்கான சுத்தி நடைமுறைகள் சந்தான கிரியையில் உண்டு.

எண்ணங்களும் ஆசைகளுமே ஒருவரைத் தனிப்பட்ட பிரக்ஞையுடன் கட்டிப்போட்டுவிடுகின்றன. இந்த தொந்தரவுகள் அகற்றப்பட்டால் ஒருவரால் மேல்நிலை பிரக்ஞையை அடையமுடியும். ஒரு யோகியால் தனது ஆற்றலை குவித்து தெய்வீக ஆற்றலை அடைய முடியும். ஆனால் அந்த ஆற்றலை ஒரு யோகி, சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. சூரியன் தனது சேவைகளுக்காக சன்மானம் கேட்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதே நிலை யோகிக்கும் பொருந்தும்.

தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x