Last Updated : 12 Jan, 2017 10:33 AM

 

Published : 12 Jan 2017 10:33 AM
Last Updated : 12 Jan 2017 10:33 AM

ஓஷோ சொன்ன கதை: அவர் கையில் உள்ளது வாள்

சமீபத்தில்தான் அவனுக்குத் திருமணமாகியிருந்தது. அவன் தனது புது மனைவியுடன் படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் பயணித்த ஏரியில் திடீரென்று பெரும் புயல் அடிக்கத் தொடங்கியது. அவன் வீரன். அவனது இளம் மனைவியோ புயலைப் பார்த்து மிகவும் அஞ்சினாள். படகோ சிறியது; கடும் புயலில் படகு மூழ்கிவிடும் என்று அவள் அஞ்சினாள். ஆனால் அவனோ அமைதியாக, எதுவுமே நடவாதது போல அமர்ந்திருந்தான்.

“உனக்குப் பயமேயில்லையா? நமது வாழ்க்கையின் கடைசித் தருணமாக இந்தப் பயணம் அமைந்துவிடலாம். மறு கரையை அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய, மரணம் நிச்சயம். நீ என்ன கல்லா, ஜடமா?” என்று கேட்டாள்.

அவன் சிரித்தான். தன்னுடைய இடுப்பு உறையிலிருந்து வாளை எடுத்தான். அவளுக்கோ கூடுதலான ஆச்சரியம்- இவன் என்ன செய்கிறான்?

தன் வாளை அவளது கழுத்திற்கு நெருக்கமாக வைத்தான். “உனக்கு அச்சமாக இருக்கிறதா?” என்று கேட்டான்.

அவள் களுகளுவென்று சிரித்து, “உனது கைகளில் வாள் இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்? நீ என்னை நேசிப்பவன் என்று எனக்குத் தெரியும்.” அவன் தனது வாளைத் திரும்பத் தனது உறையில் செருகினான்.

“உன்னுடைய கேள்விக்கு என்னுடைய பதிலும் இதுதான். கடவுள் நம்மை நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவரது கைகளில்தான் வாள் உள்ளது. இந்தப் புயலும் அவர் கைகளில் தான் உள்ளது. அதனால் எது நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும். நாம் பிழைத்தாலும் நல்லது. நாம் பிழைக்காவிட்டாலும் நல்லது. ஏனெனில் எல்லாம் அவர் கைகளில் உள்ளது. அவரால் தவறிழைக்க இயலாது.”

இந்த நம்பிக்கையைத் தான் ஒருவர் பின்பற்ற வேண்டும். அப்படிப்பட்ட அசாத்தியமான நம்பிக்கை, ஒருவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடக்கூடியது. அதற்குக் குறைவான எதனாலும் எதையும் மாற்ற முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x