Published : 28 Aug 2014 12:27 PM
Last Updated : 28 Aug 2014 12:27 PM

வார ராசிபலன் 28-08-2014 முதல் 03-09-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் புதன் ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். சூரியன் 5-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.

மாதர்களது நிலை உயரும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள் நோக்கம் ஈடேறப் பெறுவார்கள். 1-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதல் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். 7-ல் சனி இருப்பதால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. இயந்திரங்களில் பணிபுரியும்போது விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு. .

நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், வெளிர்கறுப்பு.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. நீல சங்கு புஷ்ப மலரை அணிவிக்கவும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது நல்லது.



ரிஷப ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடிவரும். வியாபாரிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பொதுநலப் பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 1-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சகிப்புத்தன்மை தேவை. செவ்வாயைக் குரு பார்ப்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்பட்டுவிடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, பச்சை, நீலம், சிவப்பு.

எண்கள்: 1, 5, 6. 7, 8, 9.

பரிகாரம்: துர்கைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்து வழிபடவும். வேதம் படிப்பவர்களுக்கும் படித்தவர்களுக்கும் உதவி செய்யவும்.



மிதுன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 4-ல் புதனும் 10-ல் கேதுவும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், மேடைப் பேச்சாளர்களுக்கும் ஆன்மிக சொற்பொழிவாளர்களுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும்.

புதிய பதவி, பட்டங்கள் தேடி வரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். வியாபாரிகளுக்கு செழிப்புக் கூடும். 4-ல் ராகுவும், 5-ல் செவ்வாய், சனி ஆகியோரும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். கெட்ட எண்ணங்களுக்கும் கெட்டவர்களின் தொடர்புக்கும் இடம் தரலாகாது. 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடத்துக்கும், செவ்வாய் 6-ஆமிடத்துக்கும் மாறுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பொறியியல் துறை ஆக்கம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், ஆரஞ்சு, வெண்மை, பச்சை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 1, 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்கையையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.



கடக ராசிக்காரர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் ராகுவும் உலவுவதால் வசீகர சக்தி கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். அரசாங்கத்தாராலும், தந்தையாலும் ஓரிரு நன்மைகள் உண்டாகும். குரு ஜன்ம ராசியில் உலவுவதால் இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். 3-ல் புதன் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

4-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். 1-ஆம் தேதி முதல் யோககாரகனாகிய செவ்வாய் சனியை விட்டு விலகி, 5-ஆமிடம் மாறி, தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு....

எண்கள்: 1, 4, 6.

பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யவும்.



சிம்ம ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் சனியும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். சூரியன் ஜன்ம ராசியில் இருப்பது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். இதனால் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, கம்ப்யூட்டர், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.

நிலபுலங்கள் லாபம் தரும். வசதிகள் பெருகும். 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவதால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். செவ்வாய் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும், செவ்வாய் தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். சுகானுபவம் உண்டாகும். தாய் நலம் சீர்பெறும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை, .

எண்கள்: 1, 5, 6, 8, 9.

பரிகாரம்: துர்கையையும், விநாயகரையும் வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, வாழ்த்துக்களைப் பெறவும்.



கன்னி ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் ஓரிரு நன்மைகள் உண்டாகும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். 1-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடத்துக்கும், செவ்வாய் 3-ஆமிடத்துக்கும் மாறுவது சிறப்பாகும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களிலும் போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். பொறியியல் துறை லாபம் தரும். வசதிகள் பெருகும். தந்தை நலனில் கவனம் தேவை. கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். ஆதித்தனை வழிபடவும்.பார்வையில்லாதவர்களுக்கு உதவுவது நல்லது.



துலா ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 11-ல் சூரியனும் உலவுவதால் எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். இயந்திரப் பணிகள் ஓரளவு லாபம் தரும். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். அதனால் நன்மையும் பிறக்கும். 1-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் ஆதாயம் கூடும்.

பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்ப்புக்களுக்கிடையே வெற்றி கிடைக்கும். 1-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் செவ்வாய் தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவால் பார்க்கப்படுவதால் செல்வ நிலை உயரும். கணவன் மனைவி உறவு சீராகும். ஜன்ம ராசியில் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். 12-ல் புதனும் ராகுவும் இருப்பதால் வீண்செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 7.

பரிகாரம்: துர்கையையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவி செய்வது நல்லது.



விருச்சிக ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் சூரியனும் 11-ல் புதனும் ராகுவும் சஞ்சரிப்பது விசேடமாகும். பொருளாதார நிலை உயரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி, கம்ப்யூட்டர் போன்ற இனங்கள் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிட்டும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் உங்கள் பெயரும் புகழும் ஓங்கும். 12-ல் சனியும் செவ்வாயும் இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. 1-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் மனத்துக்கினிய சம்பவங்கள் இடம் பெறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிரச்சினைகள் குறையும். சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு..

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.. .

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும். முடவர்களுக்கு உதவி செய்யவும்.



தனுசு ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் புதனும் ராகுவும் 11-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பது சிறப்பாகும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருக்கும். நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். மாணவர்களது நிலை உயரும். மாமன் வழி உறவினரால் அனுகூலம் உண்டாகும். 1-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். உடன்பிறந்தவர்களின் நலனிலும் அக்கறை தேவைப்படும். இடமாற்றம் உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, சிவப்பு, புகை நிறம்,இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.

பரிகாரம்: விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும் குடும்பப் பெரியவர்களையும் வணங்கி வாழ்த்துக்களைப் பெறவும்.



மகர ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் மனத்துணிவு கூடும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் நலம் புரிய முன்வருவார்கள். பொருளாதார நிலை உயரும். உற்சாகம் கூடும். புதிய முயற்சிகள் கைகூடும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைகள் ஆற்றுவார்கள். பொதுநலப் பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 9-ல் புதனும் ராகுவும் உலவினாலும் புதன் பலம் கூடியிருப்பதால் தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடத்துக்கும் செவ்வாய் 11-ஆமிடத்துக்கும் மாறுவது விசேடம். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்:,ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன், பச்சை.

எண்கள்: 3, 5, 7, 8, 9..

பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும்.



கும்ப ராசிக்காரர்களே

8-ல் புதன் இருப்பது சிறப்பாகும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புக் கனிந்துவரும். தாய் வழி உறவினர்களால் அதிக அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் காண முடியும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் குழப்பம் குடிகொள்ளும். மக்களால் மன அமைதி கெடும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது.

புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. தொழிலதிபர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்குப் பிரச்சினைகள் சூழும். 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கோபப்படாமல் சுமுகமாகப் பழகவும். செவ்வாய் 10-ஆமிடம் மாறுவது விசேடம். இயந்திரப் பணியாளர்களுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும். நிலபுலங்கள் சேரும். சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதி: ஆகஸ்ட் 31.

திசை: வடக்கு.

நிறம்: பச்சை

எண்கள்: 5.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். தினமும் காலை வேளையில் சிறிதுநேரம் த்யானம் செய்வதன் மூலம் மன அமைதி பெறலாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்கவும்.



மீன ராசிக்காரர்களே

உங்கள் ராசிநாதன் குரு சுக்கிரனுடன் கூடி 5-ஆமிடத்தில் சஞ்சரிப்பதாலும், சூரியன் 6-ஆமிடத்தில் உலவுவதாலும் புத்திசாலித்தனம் வெளிப்படும். நிர்வாகத் திறமையால் சாதனைகளை ஆற்றுவீர்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை. புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். மக்களால் மகிழ்ச்சி கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் போற்றுவார்கள்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும். 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத் துணைநலனில் கவனம் தேவைப்படும். செவ்வாய் 9-ஆமிடம் மாறி, தன் சொந்த ராசியில் வலுப்பெறுவதுடன் குருவின் பார்வையையும் பெறுவதால் தெய்வ தரிசனம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், ஆரஞ்சு, வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6.

பரிகாரம்: செவ்வாய், ராகு, சனி, கேது ஆகியோருக்கு பிரீதி, பரிகாரங்கள் செய்துகொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x