Published : 13 Apr 2017 08:14 AM
Last Updated : 13 Apr 2017 08:14 AM

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: மகரம், கும்பம், மீனம்

மகர ராசி வாசகர்களே

எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழுபவர்களே! உங்கள் ராசிக்கு சந்திரன் 10-வது வீட்டில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளை அரவணைத்துப்போவீர்கள். மகனுக்குத் தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.

18.12.2017 வரை உங்களின் ராசிநாதன் சனி பகவன் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பண வரவு உண்டாகும். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேச சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். 19.12.2017 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் இக்காலகட்டத்தில் வீண் செலவுகள், கடன் பிரச்சினை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை.

1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள் வீடு, மனை சேரும். நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையாரின் உடல் நிலை சீராகும். தனித்திருந்த தந்தையார் இனி உங்களுடன் சேர்ந்துகொள்வார். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால் எதிலும் அலட்சியமின்றி முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அடுத்தவர்களைத் தாக்கிப் பேசுவது வேண்டாம். கவுரவத்திற்கு ஆசைப்பட்டு ஆடம்பரச் செலவுகள் செய்துகொண்டிருக்க வேண்டாம்.

முக்கிய வேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டங்களைக் கண்காணியுங்கள். ஆனால் 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு வக்கிர கதியிலும், அதிசாரத்திலும் லாப வீட்டில் வந்தமர்வதால் வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். அண்ணன் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

26.7.2017 வரை கேது 2-லும், ராகு 8-லும் தொடர்வதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வேலைச் சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். 27.7.2017 முதல் ராசிக்குள்ளேயே கேதுவும், ராசிக்கு 7-ல் ராகுவும் அமர்வதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் வரும். ஆனால் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர், உங்களை புகழ்வதைப் போல் பேசி உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

ஆனால் கேது ராசிக்குள் வருவதால் எதிலும் ஒரு சலிப்பு, பதற்றம், தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக்கூடும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக்கொள்ளாதீர்கள். அனுபவ மிகுந்த வேலையாட்களைச் சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர் களானாலும் கடன் தர வேண்டாம். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். மேலதிகாரிகளை அனுசரித்துப்போவது நல்லது.

பெண்களுக்கு: ஆகஸ்ட் மாதம் வரை குருவும், டிசமபர் 18 வரை சனியும் சாதகமாக இருப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. மாமனார், நாத்தனார் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் கணவர் வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டில் காட்டுவார். அவருக்கு முதுகு வலி, மூட்டு வலி வந்து செல்லும்.

ஸ்ரீ திருமங்ககையாழ்வார் அருளிய இப்பாடலை ஸ்ரீ பெருமாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள். வசதி,

வாய்ப்புகள் பெருகும்.

வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய

வாளரவி னனை மேவிச்

சங்கமா ரங்கைத் தடம லருந்திச்

சாம மாமேனி என் தலைவன்

அங்கமாறைந்து வேள்வி நால் வேத

மருங்கலை பயின்றெரி மூன்றும்

செங்கையால் வளர்க்கும் துளக்கமில்

மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே



கும்ப ராசி வாசகர்களே

உணர்வுபூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்களே! உங்கள் ராசிக்கு 9-வது வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பண வரவு உயரும். எதிர்ப்புக்கள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். எதிர்பார்த்த பணம் வரும். வருடம் பிறக்கும் போது செவ்வாய் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

18.12.2017 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். பண பலம் கூடும். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் புகழ், கவுரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். 19.12.2017 முதல் சனி லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், பண வரவு, வீடு, வாகன வசதி, வி.ஐ.பி.களின் அறிமுகம் எல்லாம் உண்டாகும். வீட்டில் நல்லது நடக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்தபந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு, 9-ல் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வருங்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாட்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் 10-ல் வந்தமர்வதால் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். அவசரப்பட்டு வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் தொடர்வதால் யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்கள் சில ஆலோசனைகள் கூறினாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சிக்கனமாக இருக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்னச் சின்னச் சண்டை சச்சரவுகள் வந்துபோகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வரக்கூடும். சேமிப்புகள் கரையும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும்.

ஆனால் 27.7.2017 வரை ராசிக்கு 12-ல் கேதுவும், 6-ல் ராகுவும் அமர்வதால் உங்களைக் கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வெளி வட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

சுப செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகள் தேடி வரும். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். உத்யோகத்திலே பணிகளை முடிப்பதிலிருந்த தேக்க நிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

பெண்களுக்கு: இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் சாதகமாக இருப்பதனால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு உயரும். அரசாங்க விஷயம் உடனே முடியும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மாமனார், மாமியார் வலிய வந்து சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மகளுடன் கருத்து மோதல் வரும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

ஸ்ரீ பேயாழ்வார் அருளிய இப்பாடலை ஸ்ரீ சிவபெருமானின் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள். புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று



மீன ராசி வாசகர்களே

வெறுப்பு விருப்பு இன்றி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர்களே! சுக்ரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளைக் கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும்.

18.12.2017 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். ஆனால் 19.12.2017 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதனால் பண பலம் கூடும். நட்பு வட்டம் விரியும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

1.9.2017 வரை குரு உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடன் உதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். ஆனால் 02.09.2017 முதல் 13.02.2018 வரை குரு 8-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்து போகும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்சினைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம்.

திடீர்ப் பயணங்களும், அலைச்சல்களும் வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பி.களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 14.2.2018 முதல் 13.4.2018 வரை குரு 9-ல் அமர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க பாதிப்பணம் தந்து மீதிப் பணம் தேடினீர்களே! இனி அது கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

26.7.2017 வரை ராகு 6-ல் தொடர்வதால் உங்களைக் கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வெளி வட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் முடிவடையும். 12-ம்

வீட்டில் கேது தொடர்வதால் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சில காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாருக்கும் ஃபைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம்.

27.7.2017 வரை கேது, லாப வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்று மொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும்.ராகு 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும்போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுத் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவ;ம் மிகுந்தவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பெண்களுக்கு: ஜுலை 27-ம் தேதி முதல் கேது சாதகமாவதால் திடீர் யோகம், பண வரவு, அந்தஸ்து உயரும்.

நாத்தனார் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார். குழந்தை பாக்கியம் உண்டு. வேற்று மதத்தவர்களால் ஆதாயம் உண்டு. கணவர் மனம் விட்டுப் பேசுவார். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார். செப்டம்பர் மாதம் முதல் குரு மறைவதால் வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவது நல்லது.

பாரதியார் அருளிய இப்பாடலை ஸ்ரீ முருகப் பெருமானின் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் 9 முறை படித்து தியானம் செய்யுங்கள்.

நன்மை கிட்டும்.

தோகைமேல் உலவும் கந்தன்

சுடர்க் கரத்திருக்கும் வெற்றி

வாகையே சூடும் வேலை

வணங்குவ தெமக்கு வேலை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x