தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார். படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூா்: திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று மாலை தொடங்கியது. தியாகப் பிரம்மமகோத்சவ சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார். தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார்.
விழாவைத் தொடங்கிவைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் பேசியதாவது: தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா 200-வது ஆண்டை நோக்கிச் செல்லும் அளவுக்கு சிறப்புடன் நடைபெறுகிறது. தியாகராஜ சுவாமிகள் 2,400 கீர்த்தனைகளை எழுதி, பாடியுள்ளார். அவர் அதிகம் ராம நாமத்தை உச்சரித்துப் பாடியுள்ளார்.
இந்த விழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. தியாகராஜ சுவாமிகள் இயற்றிய 2,400 கீர்த்தனைகளும் ஒரு இசை பாரம்பரியமாகும். இசை பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்லும் சபாவும் ஒரு பாரம்பரியம். அதை நடத்தும் குடும்பத்தினரும் ஒரு பாரம்பரியம்.
இவ்வாறு 3 பாரம்பரியமும் இணைந்ததால்தான் திருவையாறு மண்ணில் எங்கு பார்த்தாலும் தியாகராஜ சுவாமிகளின் புகழ் நிலவுகிறது. இங்கு காற்றில் கலந்துள்ள சங்கீதம், இறை உணர்வு, பக்தி ஆகியவை மக்களுக்கும், மண்ணுக்கும் தொடர்ந்து நல்வாழ்வை வழங்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.