Published : 01 Jun 2017 10:04 AM
Last Updated : 01 Jun 2017 10:04 AM

ஆன்மிக நிகழ்வு: நியுஜெர்சியில் ராதா கல்யாணம்

கடந்த இரண்டு வருடங்களாக மே மாதத்தில் அமெரிக்காவில் சத்குரு சேவா சமாஜம் சார்பில் ராதா கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது. மூன்றாவது ஆண்டாக, ராதா கல்யாண மஹோத்ஸவம் மே 27 மற்றும் 28 தேதிகளில் நியுஜெர்சி மார்கன்வில் குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்றது.

பல நூறு வருடங்களாக வழக்கத்திலிருந்து வரும் ப்ராசீன நாமசங்கீர்த்தன சம்பிரதாயத்தை, அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற குறிக்கோளோடு சத்குரு சேவா சமாஜம் இயங்கி வருகிறது. மாதம்தோறும் வட அமெரிக்காவில் நியுஜெர்சி, டெலவேர், மேரிலேண்ட், பென்சில்வேனியா, கனெக்டிகட், ஓஹயோ, ஆரேகான், கலிபோர்னியா மாகாணங்களில் நாம சங்கீர்த்தனம் நடத்தப்பட்டுவருகிறது. இந்த வருட ராதா கல்யாண மஹோத்ஸவம் நியுஜெர்சி சுவாமிநாத பாகவதர் தலைமையிலும், பல வருடங்களாக நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டு வரும், சென்னையைச் (தற்போது பெங்களூர்) சேர்ந்த ராமன் பாகவதரின் முழுப் பங்கேற்புடன் சிறப்பாக நடந்தேறியது.

நாற்பது வருடங்களாக நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டுவரும் பாபநாசம் ரமணி பாகவதரின் பங்கேற்பு இந்த வருட ராதா கல்யாணத்தின் முக்கிய அம்சமாகும். ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாடல்களான ராசகானத்தில் நிபுணர் இவர். ரமணி பாகவதர் நிகழ்ச்சியின் முடிவில் பேசுகையில், நியுஜெர்சி சுவாமிநாத பாகவதரும் மற்றும் சத்குரு சேவா சமாஜமும், வட அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு பெரிய சொத்து என்றார். இப்பணி பல வருடங்கள் தொடருவதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.

பக்தியை வெளிப்படுத்திய குழந்தைகள்

அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழும் சில பாகவதர்கள், சுவாமிநாத பாகவதரோடு இணைந்து, ராதா கல்யாணத்தில் நாம சங்கீர்த்தன பஜனை செய்தனர். குழந்தைகளும் இந்த மஹோத்ஸவத்தில் நாம சங்கீர்த்தன பஜனை செய்து தங்கள் பக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினர்.

தோடயமங்களம், குருகீர்த்தனம், சம்பிரதாய அஷ்டபதி பஜனை, தரங்கம், குழந்தைகள் நாம சங்கீர்த்தனம், பஞ்சபதி கீர்த்தனம், தேவதா தியானம், திவ்யநாமம், தீப ப்ரதக்ஷிணம் என்றபடி முதல் நாள் மஹோத்ஸவம் நிறைவேறியது. தேவதா தியானம் நிகழ்ச்சியின் போது குழந்தைகள் பிள்ளையார், முருகர், கிருஷ்ணர் போன்று அலங்கரித்துக்கொண்டு மேடையேறி பக்தர்களை ஆனந்தமடையச் செய்தனர். இரண்டாம் நாளன்று உஞ்சவிருத்தி, திவ்யநாமப் பஜனையைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கியமான ராதா கல்யாண வைபவம் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருக்க நடந்தது.

இரண்டாம் நாள் மாலை ஆஞ்சநேய உத்சவத்தோடு, சத்குரு சேவா சமாஜம் நடத்திய மூன்றாம் வருட ராதா கல்யாண மஹோத்ஸவம் நியுஜெர்சியில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த மஹோத்ஸவத்தில் கலந்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் “Short Stories from Indian Mythology” மற்றும் “About Kanchi Mahaperiyava” என்கிற இரு புத்தகங்களும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன.

நாம சங்கீர்த்தன சம்பிரதாயத்தை வளர்ப்பது மட்டுமின்றி, பாகவதர்களுக்கு நிதி உதவி (குழந்தைகள் படிப்பு, மருத்துவ உதவி) அளிப்பது, வேத பாடசாலைகளுக்குப் பொருளாதார உதவி செய்வது, ஓதுவார்களுக்கு மாதாந்தரப் பொருளாதார உதவி (சைவ சமய ஆலயங்களில் ஓதுவார்கள் ஆற்றும் பணிக்கு ஆதரவாக) செய்வது எனப் பல காரியங்களுக்கு சத்குரு சேவா சமாஜம் முயன்றுவருகிறது.

சத்குரு சேவா சமாஜத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், நியுஜெர்சி ராதா கல்யாண மஹோத்ஸவத்தின் புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் கண்டு மகிழவும் >www.satguruseva.org என்ற இணைய தளத்திற்குச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x