முல்லா கதைகள்: பேசும் பறவை, பேசாப் பறவை

முல்லா கதைகள்: பேசும் பறவை, பேசாப் பறவை
Updated on
1 min read

ஒரு நாள் , சந்தைக்குச் சென்ற முல்லா, ‘பறவைகள் விற்பனை’க்கு என்ற அறிவிப்பைப் பார்த்தார். அதில் ஒவ்வொரு பறவையும் 500 ரியால்களுக்கு விற்கப்படுவதாக எழுதப்பட்டிருந்தது. ‘இவை எல்லாவற்றையும்விட, பெரியதாகவும் சிறந்ததாகவும் இருக்கும் ‘என் பறவை’யின் மதிப்பு அதிகம்’ என்று அவர் நினைத்தார்.

அடுத்த நாள், அவர் தன் கோழியைச் சந்தைக்கு எடுத்துச்சென்றார். யாருமே அதற்கு 50 ரியால்களுக்கு மேல் கொடுக்கத் தயாராக இல்லை. முல்லா கூச்சலிடத் தொடங்கினார்:

‘ஓ மக்களே! இது அவமானம்! நேற்று நீங்கள் இதைவிட அளவில் பாதி இருந்த பறவைகளைப் பத்து மடங்கு அதிக விலைக்கு விற்றீர்கள்.’

கூட்டத்திலிருந்த ஒருவர் குறுக்கிட்டர்: ‘நஸ்ருதீன், அவை கிளிகள் – பேசும் பறவைகள். அவை பேசும் திறன்பெற்றிருப்பதால், அவற்றின் விலை அதிகமாக இருந்தது’ என்றார்.

‘முட்டாள்! பேசும் திறனால்தான் அந்தப் பறவையை நீங்கள் அதிகமாக மதிப்பீடுகிறீர்கள். ஆனால், இந்தப் பறவை அற்புதமான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் யாரையும் பேசி எரிச்சல் படுத்தாது. அதைப் போய் நீங்கள் நிராகரிக்கிறீர்கள்’ என்றார் முல்லா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in