வாழ்வை வளமாக்கும் வைகாசி அமாவாசை தர்ப்பணம்!

வாழ்வை வளமாக்கும் வைகாசி அமாவாசை தர்ப்பணம்!
Updated on
1 min read

வைகாசி மாதத்தின் அமாவாசையில் தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாடு செய்ய மறக்காதீர்கள். இந்த வழிபாடு, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வளமாக்கி வாழச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு மாதமும் பிறக்கிற தமிழ் மாதம், கிரகணங்கள், புரட்டாசி மகாளய பட்சத்தின் காலங்கள் என முன்னோரை வழிபடுவதற்கு உரிய நாட்களாக, முக்கியமான நாட்களாக, முன்னோருக்கான நாட்களான 96 நாட்கள் இருக்கின்றன என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அமாவாசை என்பதே முன்னோருக்கான நன்னாள்தான். இந்தநாளில், முன்னோரை நினைத்து அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரிப்பதும் தூபதீபங்கள் காட்டி ஆராதனை செய்வதும்... மிகவும் பலன் தரும் என்பது ஐதீகம்.

நாளை 3.6.19 திங்கட்கிழமை அமாவாசை. சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் அமாவாசை வருவது விசேஷம். இந்தநாளில், மறக்காமல் முன்னோர் ஆராதனையைச் செய்யுங்கள். அவர்களின் படங்களுக்கு மாலை சார்த்துங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து, காகத்துக்கு வழங்குங்கள்.

மேலும் முன்னோரை நினைத்து, உங்களால் முடிந்த அளவுக்கு, ஒரு நான்குபேருக்கேனும் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் என உணவுப் பொட்டலம் வழங்குங்கள். வீட்டில் இதுவரை இல்லாத நிம்மதியும் சந்தோஷமும் இனி குடியேறும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். தரித்திரம் விலகும். உங்கள் வாழ்க்கையையே வளமாக்கித் தருவார்கள் முன்னோர்கள் என்பது உறுதி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in