Published : 09 Jun 2019 03:10 PM
Last Updated : 09 Jun 2019 03:10 PM
மறக்காமல், அஷ்டமியில் பைரவரை வழிபட்டால், நம்முடைய கஷ்டத்தையெல்லாம் இனி மறந்துவிடலாம். அனைத்தையும் நீக்கி அருள்புரிவார் பைரவர். நாளை அஷ்டமி. தேய்பிறை அஷ்டமிதான் பைரவருக்கு விசேஷம். ஆனாலும் நாளை (10.6.19) திங்கட்கிழமை, வளர்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம் செய்யுங்கள்.
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு சொல் உண்டு. இந்தக் கலியுகத்தில், காலபைரவர் வழிபாடு செய்யச் செய்ய... எல்லா இடர்பாடுகளும் விலகும் என்பது ஐதீகம். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்று சொல்லிவைத்தார்கள்.
எல்லா சிவன் கோயில்களிலும் பைரவருக்கு என சந்நிதி உண்டு. பெரும்பாலும் சந்நிதி, விமானம் என்றில்லாமல், காட்சி தருவார் காலபைரவர். அஷ்டமி திதியில் பைரவரை வணங்குவது சிறப்பு. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம், பயம் அனைத்தையும் போக்கி, எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி, நல்லனவற்றையெல்லாம் தந்தருளும் என்பது ஐதீகம். ஆனாலும் வளர்பிறை அஷ்டமியிலும் பைரவரை வணங்கலாம்.
காலை அல்லது மாலையில் சிவாலயம் சென்று, பைரவருக்கு நடைபெறும் விசேஷ பூஜையைத் தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும். முக்கியமாக, திங்கட்கிழமை ராகுகால வேளையான காலை 7.30 முதல் 9 மணியில் பைரவரை வணங்குவது இன்னும் வளம் கொழிக்கச் செய்யும்.
அதேபோல், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். காலபைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வதும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்வதும் இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது. முடிந்தால், பைரவருக்கு வடைமாலை சார்த்தலாம்.
எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். இன்னல்கள் யாவும் காணாமல் போகும். கவலைகளையெல்லாம் நீங்கள் மறந்தேபோவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் பைரவர் பேரருள் புரிந்து துணை நிற்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT