Published : 06 Jun 2019 02:23 PM
Last Updated : 06 Jun 2019 02:23 PM
’கைநிறைய சம்பாதிக்கிறான் பையன். ஆனாலும் இன்னும் கல்யாணம் நேரம் நெருங்கலையே...’ என்றும் ‘நல்லாப் படிச்சிருக்கா. மூக்கும் முழியுமாத்தான் இருக்கா. ஆனா ஒரு வரன் தகைய மாட்டேங்கிதே...’ என்று என்றும் பையனைப் பெற்றவர்களும் பெண்ணைப் பெற்றவர்களும் புலம்புவதையும் வருந்துவதையும் கேட்டிருப்போம். நம் சமூகத்தில், திருமணமாகாமல் தள்ளிப்போவதுதான் பெருங்குறை.
ஜாதகத்தில் தோஷம் இருந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். அல்லது தோஷமே இல்லாமல் கூட தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கு அவர்களின் பூர்வ ஜென்ம பலன்களுக்குத் தகுந்தது மாதிரியே, திருமண வரம் கைகூடும் என்பார்கள்.
திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதே என கவலைப்படாதீர்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் செல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என ஏதேனும் ஒருநாளில், ஆலயத்தில் உள்ள துர்கையின் சந்நிதிக்குச் செல்லுங்கள். அவளின் சந்நிதிக்கு எதிரே, தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள்.
பிறகு சந்தனத்தாலும் மஞ்சளாலும் நன்றாக மெழுகுங்கள். பிறகு அந்த இடத்துக்கு குங்குமமிடுங்கள்.
மெழுகிய இடத்தில், ஐந்து திரி கொண்ட விளக்கை வையுங்கள். அதில், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் என முக்கூட்டு எண்ணெயை விடுங்கள். தீக்குச்சியால் விளக்கேற்றாமல், ஒரு ஊதுபத்தியின் முனையில் எண்ணெயால் நனைத்து, ஒரு சுடர் போல் பற்றவைத்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு, விளக்கேற்றுங்கள்.
விளக்குக்கு அருகில், பஞ்சபாத்திரத்தில் அல்லது ஒரு தம்ளரில், தண்ணீர், அருகம்புல், துளசி கொண்டு தீர்த்தம் வையுங்கள். இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்துக்கொள்ளுங்கள். அதை இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
எலுமிச்சைச் சாறைப் பிழிந்தெடுத்து, அதில் தேனும் சர்க்கரையும் கலந்து நைவேத்தியம் செய்யுங்கள். துர்கையை மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
பிறகு நறுக்கிய எலுமிச்சையின் வெளிப்புறத் தோல் பகுதியை உள்பகுதியாக்கிக்கொள்ளுங்கள். அதில் இருந்து மூன்று அகல்விளக்குகளாக பாவித்து, ராகுகாலவேளையில் விளக்கேற்றுங்கள்.
இப்படியாக, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில், தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், திருமணத்துக்கான தடைகள் யாவும் விலகும். விரைவில் நல்ல வரன் தேடிவரும். மனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைப்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT