Last Updated : 07 Mar, 2018 10:08 AM

 

Published : 07 Mar 2018 10:08 AM
Last Updated : 07 Mar 2018 10:08 AM

ஜோதிடம் அறிவோம்! 20 இதுதான்... இப்படித்தான்! இரவில் தூக்கமில்லாமல் தவிப்பவரா நீங்கள்?

கடந்த அத்தியாயத்தில், பரிகாரங்களைப் பார்த்தோம். பூட்டுக்குச் சாவி கையில் இருந்தால்தானே தைரியமாகப் பூட்டுவோம். அதனால், பரிகாரங்களை முதலில் உங்களுக்கு எடுத்துரைத்தேன். இப்போது பரிகாரம் தெரிந்துவிட்டது அல்லவா. புனர்பூ தொடர்பான தோஷங்களையும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் பார்ப்போம்.

‘விபத்து நடக்கும் இடம்’ என்ற அறிவிப்புப் பலகை, சாலையோரத்தில் இருக்கும், பார்த்திருக்கிறோம்தானே. அப்படித்தான் இதுவும்!

வாருங்கள்... தோஷங்களையும் பிரச்சினைகளையும் பார்க்கலாம்.

புனர்பூ தோஷமானது திருமணத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தருகிறது என்று பார்த்தோம். மேலும் சிலரது திருமணங்களில் என்னவெல்லாம் நடந்தது என பார்ப்போம்,

இப்போதும் என் நண்பரின் திருமணத்தில் நடந்த ஒரு விஷயத்தைத்தான் சொல்லப் போகிறேன்.

என் நண்பரின் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இனிதாக நடந்து மாங்கல்யமும் கட்டி முடித்தார். ஆனால் மாங்கல்யத்தை மணமாலைக்கு உள்ளே விட்டு கட்டியதால், மாலைமாற்றும் வைபவத்திற்கு மாலையை எடுக்க முற்படும்போதுதான் இந்த விபரம் தெரிய வந்தது,

மாலையை எடுத்தால் மாங்கல்யமும் சேர்ந்தே வரும், என்ன செய்வது கட்டிய மாங்கல்யத்தை பிரிக்கக்கூடாது,

எனவே மாலையைப் பிரித்து மீண்டும் கட்டிவிட்டு இந்த மாலைமாற்றும் வைபவத்தைச் செய்தார்கள்,

இதில் கவனிக்கப்படவேண்டியது, எத்தனை விழிப்புடன் இருந்தாலும் கிரகங்கள் தன் கடமையை செய்யத் தவறுவதே இல்லை என்பதுதான்.

ஒரு பதட்டத்தை, குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் புனர்பூ தோஷத்தின் மகிமை.

இன்னும் ஒரு சம்பவம் சொல்கிறேன்.

என் குடும்ப நண்பரின் மகளுக்கு நடந்த திருமணம் பற்றியது இது.

அந்தப் பெண் ஒருவரைக் காதலித்தார். ஆனால் என் நண்பர் ஏற்றுக்கொள்ளவில்லை.

என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் இந்த புனர்பூ தோஷம் உங்கள் மகளுக்கு இருப்பதாலும், அவர் ஜாதகப்படி காதல் மணம்தான் நடக்கும் என்று சொன்னேன்,

ஆனால் அவர் இது கௌரவ பிரச்சினை எனக் கூறி, மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து பத்திரிகையும் அடித்து விட்டார்.

ஆனால் அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொண்ட விதம் சரியாக இல்லாததால் திருமணத்தை நிறுத்திவிட்டார்,

இப்போதும் என்னிடம் ஆலோசனை கேட்டவரிடம் காதலித்த பையனையே மணம் முடித்து விடுங்கள் என்றேன். ஆனால், கேட்கும் மனநிலையில் அவர் இல்லை.

அடுத்ததாக இன்னொரு வரனை நிச்சயம் செய்து மீண்டும் பத்திரிகை அடிக்கப்பட்டது, முதல் பத்திரிகையை, குலதெய்வத்தின் சந்நிதியில் வைக்க சொந்த ஊர் சென்றார்.

அப்போது மாப்பிள்ளை போன் செய்து ஏதோ கேட்க, குலதெய்வத்திற்கு பத்திரிக்கை வைக்காமல் அப்போதே திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இப்போது வாடிவதங்கி என்னிடம் வந்தவர், காதலித்த பையனையே பேசி முடிக்கிறேன். இருவர் ஜாதகமும் நன்றாக உள்ளதா எனக்கேட்டார். அ ற்புதமாக உள்ளது , சேர்த்து வையுங்கள் என பிரச்சினையை முடித்து வைத்தேன்.

யோசித்துப் பாருங்கள்... அவரின் வறட்டுப் பிடிவாதம் எவ்வளவு செலவு, அலைச்சல், மனநிம்மதி என பாதிக்கப்பட்டது. எப்படியெல்லாம் உளைச்சலுக்கு ஆளானார்.

என்னதான் முயற்சி செய்தாலும் கிரகங்களின் வீரியத்தைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தாலே, பரிகாரம் என்ற பெயரில் செலவு செய்வது வீண் என்பதை உணர்ந்துகொள்வோம். அப்படி நீங்கள் உணர்ந்தாலே, இந்தத் தொடரின் வெற்றி என மகிழ்வேன்.

பிரச்சினைகளைக் கண்டு பயந்து பரிகாரம் செய்கிறேன் என்று ஒளிவதை விட இறைவனின் துணையோடு அதை எதிர்கொண்டு கடந்து போவதே உண்மையான பரிகாரம்!

சரி இப்போது நாம் , “வாழ்க்கையில் என்ன செய்யும் இந்த புனர்பூ தோஷம்” என்பதை பார்க்கலாம்,

ஒரு நினைவூட்டல்:- ஒருவர் ஜாதகத்தில் சனிபகவானும், சந்திரபகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவர், இவர் வீட்டில் அவர் என பரிவர்த்தனை அடைந்தாலும் இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.

இது திருமணத்தில் தரும் பாதிப்பைப் பார்த்து விட்டோம். வேறு என்ன செய்யும்? அதையும் பார்க்கலாம்.

இந்த தோஷம் இருப்பவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கத் திணறுவார்கள், முடிவெடுத்த பின் செயல்படுத்தவும் தயங்குவார்கள்.

இதையெல்லாம் தாண்டி ... எடுத்த முடிவு.... பாவம் முடிவுக்கே வராது இழுத்தடிக்கும். அதாவது நடைபெறாத முயற்சியாகவே இருக்கும்.

இன்னும் என்ன? குழப்பவாதி, தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பிவிடுபவர், முடிவெடுக்க தயங்குபவர், தவறான முடிவுகளை எடுப்பவர் என்றெல்லாம் பெயர் சம்பாதிக்க நேரிடும்.

அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர், (மார்க்கெட்டிங்) டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் தொழில் செய்பவர், ஓட்டுநர், உணவுத்தொழில்,

அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பவர்,

அதாவது நிலையாக ஒரே இடத்தில் வேலையில் இருக்கமாட்டார்,

எந்த வேலை அல்லது தொழில் செய்தாலும் மனநிறைவு இல்லாதவர், அடிக்கடி கன்னத்தில் கை வைத்துக்கொள்பவர்,

ஜாதகம் பலமாக இருந்தால் நாடுநாடாக சுற்றி பொருள் ஈட்டுபவர்,

மனசஞ்சலம் உடையவர், ஜாதகம் பலவீனமாக இருந்தால் மனநல பாதிப்பை அடைவார்,

இருளுக்கு பயப்படுவார், அமானுஷ்யத்தில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.

மதுப் பழக்கம் ஏற்பட்டால் மீளமுடியாதவர்.

இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்.

பகல் தூக்கம் விரும்புபவர்.

இளமையிலேயே நரைமுடி ஏற்படும், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உடையவர். அடிக்கடி வாயுதொல்லை ஏற்படும்.

இவற்றில் இருந்து விடுபடுவதற்கு, தானம் செய்யுங்கள். திருமலை திருப்பதிக்குச் சென்று தரிசியுங்கள். தியானம் பழகுங்கள்.

தண்ணீர்ப் பந்தல், மோர்ப்பந்தல் அமைத்து எல்லோருக்கும் வழங்குங்கள் என்று கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.

சரி... அடுத்த அத்தியாயத்தில், இன்னும் சில தோஷங்கள் குறித்தும் பரிகாரங்கள் குறித்தும் சொல்கிறேன்!

-தெளிவோம்

-இதன் அடுத்த அத்தியாயம் வரும் 12.3.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x