Last Updated : 21 Mar, 2018 10:00 AM

 

Published : 21 Mar 2018 10:00 AM
Last Updated : 21 Mar 2018 10:00 AM

குருவாரத்தில் கிருத்திகை; ஞானகுரு கந்தனை வணங்குவோம்!

குருவாரத்தில் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் அற்புத நன்னாளில், ஞானகுருவாகத் திகழும் கந்தகுமாரனை வணங்குவோம். மங்காத செல்வமும் ஞானமும் தந்து அருள்பாலிப்பான் வேலவன்.

வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவாரத்தில் குருவைத் தொழுவதும் தரிசிப்பதும் ஆராதனை செய்வதும் மகோன்னதமான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். குரு வார நாளில், குரு தட்சிணாமூர்த்தியையும் நவக்கிரக சந்நிதியில் குடிகொண்டிருக்கும் குரு பகவானையும் வணங்கி வளமும் நலமும் பெறலாம்.

மேலும் படைப்புக் கடவுளான பிரம்மாவை, தரிசிப்பதும் வணங்கிப் பிரார்த்திப்பதும் மிகுந்த பலனை வாரிவழங்கக் கூடியவை. குரு பிரம்மாவை வணங்குவோம். படைத்த பிரம்மா, நம்மைக் காத்தருள்வார்.

அப்பேர்ப்பட்ட உன்னதமான வியாழக்கிழமையில், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. நாளைய தினம் 22.3.18 வியாழக்கிழமை, கிருத்திகை நட்சத்திர நாள். எனவே கிருத்திகை விரதமிருந்து கார்த்திகேயனை வழிபடுங்கள்.

அத்துடன் முருகப்பெருமானை, ஞானகுரு என்று போற்றுகிறது புராணம். அப்பனுக்கே பாடம் சொன்னவன் அல்லவா முருகன். பிரணவப் பொருளை உரைத்த வேலவனை ஞானகுரு என்பார்கள். ஆகவே குரு வார நன்னாளும் கிருத்திகை நட்சத்திரமும் கூடிய அற்புதமான நாளில், கந்தக்கடவுளை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கலோ பாயசமோ நைவேத்தியம் செய்து தரிசிப்போம்; பிரார்த்திப்போம். நினைத்த காரியம் யாவும் கைகூடும். தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். ஞானமும் யோகமும் தந்தருள்வான் ஞானகுரு வேலவன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x