Last Updated : 10 May, 2019 09:29 AM

 

Published : 10 May 2019 09:29 AM
Last Updated : 10 May 2019 09:29 AM

சித்திரை வெள்ளி... சஷ்டி; எதிர்ப்பெல்லாம் தூள்தூளாகும்!

சித்திரை மாதத்தின் சஷ்டி, வெள்ளிக்கிழமையன்று வந்துள்ளது. ஆமாம்... இன்று 10.5.19ம் தேதி சஷ்டி. முருகப்பெருமானுக்கு உரிய நன்னாளில் கந்தகுமாரனை வழிபடுங்கள். பலமும் வளமும் தந்தருள்வார் வேலவன். நம் எதிர்ப்பெல்லாம் தூள்தூளாக்கிவிடுவார் ஞானக்குமரன்!

பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய, அற்புதமான, வழிபாட்டுக்கு உரிய நாள். அதேபோல் வெள்ளிக்க்கிழமை என்பதும் குமரனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

சித்திரை மாதத்தில், வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் ஒருசேர வருவது கூடுதல் சிறப்பு. இன்னும் விசேஷம். இந்தநாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் வருந்தத் தேவையில்லை. வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்வதும், கந்தசஷ்டி கவசம் படிப்பதும் மிகுந்த பலனைத் தரவல்லது.

இன்று 10.5.19 வெள்ளிக்கிழமை சஷ்டி. வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்திருக்கும் நாளில், சித்திரை மாதத்து வெள்ளியும் சஷ்டியும் இணைந்திருக்கும் இந்த வேளையில், மாலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அல்லது சிவாலயத்தில் உள்ள முருகன் சந்நிதியில், மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

முடிந்தால், செவ்வரளி மாலை சார்த்துங்கள். வீட்டில் விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.

செவ்வாய் முதலான தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தூள்தூளாகும். கடன் தொல்லையில் இருந்தும் வழக்குச் சிக்கல்களில் இருந்தும் மீண்டுவருவீர்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x