Published : 29 Sep 2014 12:02 PM
Last Updated : 29 Sep 2014 12:02 PM

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.க. தலைவர் வீரமணி வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்து, அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச்சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற இருக்கின்றனர்.

அமைதியும், அடக்கமும் நிறைந்த ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே ஒரு முறை இப்பதவியில் அமர்த்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத்திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் (இரண்டாவது முறையாக) அ.தி.மு.க. முதல்வர் ஆவது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது.

அவரது தலைமையில் அமைந்த புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க்கட்சிகளையும் மதித்து, தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x