Last Updated : 11 Mar, 2019 10:58 AM

 

Published : 11 Mar 2019 10:58 AM
Last Updated : 11 Mar 2019 10:58 AM

மாசி செவ்வாய்; கிருத்திகை, சஷ்டி; மூன்றும் இணைந்தநாளில் முருக வழிபாடு!

மாசிச் செவ்வாய், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் என மூன்றும் இணைந்து வரும் நாளைய தினத்தில், முருக வழிபாடு செய்யுங்கள். முருகக் கடவுளைத் தரிசியுங்கள். பன்மடங்கு பலன்களைப் பெற்று, சகல ஐஸ்வரியங்களுடன் இனிதே வாழ அருளுவார் கந்தக்கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

பொதுவாகவே, செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு உரிய நாள். அதிலும் மாசிச் செவ்வாய் முருக வழிபாட்டுக்கு விசேஷமான நாள் என்கின்றனர் முருக பக்தர்கள். அதிலும் குறிப்பாக, நாளைய மாசிச் செவ்வாய் (12.3.19) இந்த மாசி மாதத்தின் கடைசிச் செவ்வாய். எனவே மறக்காமல் முருகப்பெருமானை தரிசித்து பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும்!

மேலும் நாளைய தினம் சஷ்டி விரதம். மாதந்தோறும் வருகிற சஷ்டி நாளைய தினம் செவ்வாய்க்கிழமையிலேயே வருவது சிறப்பு. சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், அல்லது முருகப் பெருமானைத் தரிசிக்க மட்டும் செய்பவர்கள், நாளைய தினம், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப்பெருமானுக்கு வீட்டில் சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வீட்டின் கருத்துவேற்றுமைகள் நீங்கும். தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும். வழக்கு முதலான சிக்கல்கள் அனைத்தும் தீர்த்து அருளுவார் செந்தில்வேலன்.

மாசிச் செவ்வாய் போல, மாதாந்திர சஷ்டி போல, மாதந்தோறும் வருகிற கார்த்திகை விரதமும் நாளைய தினத்தில் (12.3.19) சேர்ந்தே வருகிறது. அதாவது, மாசிச் செவ்வாய், சஷ்டி விரதம், கார்த்திகை விரதம் என மூன்றும் இணைந்து வருவது அரிதான ஒன்று என்று சிலாகிக்கிறார்கள். இந்த கார்த்திக விரத நாளில், கந்தப் பெருமானை நினைத்து, காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலமாக வழங்குங்கள்.

செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டி முருகப்பெருமானை அலங்கரியுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கோ அல்லது சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சந்நிதிக்கோ சென்று தரிசியுங்கள். குறிப்பாக செவ்வாய் தோஷக்காரர்கள் மறக்காமல், முருக தரிசனம் செய்வது அவர்களை தோஷ நிலையில் இருந்து விடுவிக்கும் என்பது உறுதி என்கிறார்கள்.

மாசியின் கடைசிச் செவ்வாய், சஷ்டி, கார்த்திகை என மூன்றும் இணைந்த நன்னாளில், முருகப்பனை கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டுங்கள். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் நல்ல வேலை, வேலையில் பதவி, சம்பள உயர்வு ஆகியவை அடுத்தடுத்துக் கிடைக்கும். நிலம், பூமி தொடர்பான சிக்கல்களும், வழக்குப் பிரச்சினைகளும் தீர்வுக்கு வரும். நல்ல முடிவைத் தந்தருள்வார் முருகக்கடவுள் என்கிறார்கள் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x