பங்குனி... சஷ்டி... செவ்வாய் - பலமும் வளமும் தரும் முருக வழிபாடு!

பங்குனி... சஷ்டி... செவ்வாய் - பலமும் வளமும் தரும் முருக வழிபாடு!
Updated on
1 min read

பங்குனி மாதத்தின் சஷ்டி, செவ்வாய்க்கிழமையன்று வந்துள்ளது. ஆமாம்... இன்று 26.3.19ம் தேதி சஷ்டி. முருகப்பெருமானுக்கு உரிய நன்னாளில் கந்தபெருமானை வழிபடுங்கள். பலமும் வளமும் தந்தருள்வார் வேலவன்.

பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான வழிபாட்டுக்கு உரிய நாள். அதேபோல் செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

பங்குனி மாதத்தில், செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் ஒருசேர வருவது கூடுதல் சிறப்பு. இந்தநாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.

இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்வதும், கந்தசஷ்டி கவசம் படிப்பதும் மிகுந்த பலனைத் தரவல்லது என்கிறார்கள் பக்தர்கள்.

இன்று 26.3.19 செவ்வாய்க்கிழமை சஷ்டி. செவ்வாயும் சஷ்டியும் இணைந்திருக்கும் நாளில், மாலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அல்லது சிவாலயத்தில் உள்ள முருகன் சந்நிதியில், மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

முடிந்தால், செவ்வரளி மலர்கள் சார்த்துங்கள். வீட்டில் விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.

செவ்வாய் முதலான தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தெறித்து ஓடும். பலமும் வளமும் பெற்று இனிதே வாழ்வீர்கள்.  

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in