Last Updated : 17 Feb, 2019 09:06 AM

 

Published : 17 Feb 2019 09:06 AM
Last Updated : 17 Feb 2019 09:06 AM

ஞாயிறு பிரதோஷம் மறக்காதீங்க!

இன்று 17.2.19ம் தேதி மாசிப் பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷம். எனவே நாளைய தினம் மறக்காமல், சிவாலயம் சென்று சிவனாரையும் நந்தியையும் தரிசித்து வணங்குங்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய அற்புத வேளை. பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்வது, பாவங்களை நீக்கி, புண்ணியங்களைத் தந்தருளும். சிவனாரின் பரிபூரண அருளைப் பெற்று, ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். அதேபோல் சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷமும் சிறப்பு வாய்ந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 17.2.19 பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷம். இப்படி ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் உன்னதமானது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பிரதோஷ நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் என்பதும் மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் வேளையில், நாம் சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி.

ராகுகாலத்தின் போது துர்கைக்கு விளக்கு ஏற்றி வணங்குவோம். அதேபோல், நவக்கிரகங்களை அப்போது வழிபடுவதும் வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் விசேஷம். ராகு - கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது, ராகு கேது தோஷங்களைப் போக்கி, கல்வி, உத்தியோகம், சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றங்களை வழங்கும்.

எனவே, ஞாயிறுப் பிரதோஷத்தில், சிவாலயம் செல்லுங்கள். வில்வம், செவ்வரளி, நந்திதேவருக்கு அருகம்புல் முதலானவற்றை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகியுங்கள்.

வீட்டில் சுபிட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x