Last Updated : 19 Feb, 2019 07:21 AM

 

Published : 19 Feb 2019 07:21 AM
Last Updated : 19 Feb 2019 07:21 AM

மாசி மகம்; போர்வை, ஆடை, உணவு தானம் செய்யுங்கள் - உங்கள் வம்சம் தழைக்கும்!

மாசி மக நன்னாளில் இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள். ஆடைகள் தானம் செய்யுங்கள். முடிந்த அளவுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குங்கள். நீங்களும் உங்கள் வம்சமும் வாழையடி வாழையென தழைப்பீர்கள். சிறந்து வாழ்வீர்கள். நாளை செவ்வாய்க்கிழமை (19.2.19), மாசி மக நன்னாள்.

மாசி மக நன்னாளில், புனித நீராடுவது ரொம்பவே விசேஷம். மாசி மகம் என்றதும், கும்பகோணம் மகாமகம் திருக்குளம் நினைவுக்கு வரும். திருக்கோஷ்டியூர் தெப்போத்ஸவமும் விளக்கு வழிபாட்டு பிரார்த்தனையும் ஞாபகத்துக்கு வரும்.

நாளைய தினம், கும்பகோணம் மகாமக தீர்த்தக்குளம் மட்டுமின்றி, காவிரி, தாமிரபரணி, வைகை முதலான புண்ணிய நதிகளில் நீராடுவதும் பல நன்மைகளை வழங்கும் என்கிறது சாஸ்திரம்.

நீராடுவதற்கு முன்னதாக முறைப்படி சங்கல்பம் செய்துகொண்டு நீராடுங்கள். கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்னதாக சங்கல்பம் செய்துகொள்ளுங்கள். எந்தவொரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், அன்றைய திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணம் ஆகியவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக அல்லது பலனுக்காக அந்த பூஜையைச் செய்கிறோமோ அதற்கு உரிய வேண்டுகோளை அந்தந்த கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து துவங்குவதே சங்கல்பம் எனப்படுகிறது. பூஜைகள், புண்ணிய நதி அல்லது தீர்த்த நீராடல், முன்னோர்களுக்கான திதி, தானம் கொடுத்தல் ஆகிய அனைத்துக்குமே தனித்தனி சங்கல்பங்கள் உள்ளன.

மகாமகக் குளத்தில் நீராடலுக்கு முன்பு காவிரியில் சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும். பின்னர் பஞ்ச கவ்யம் உட்கொள்ள வேண்டும். மகாமகக் குளத்தில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் சங்கல்பம் செய்து நீராடுவது சிறப்பு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .மகாமகக் குளம் என்றில்லை... இந்த நாளில் எந்தப் புனித தீர்த்தத்தில் நீராடினாலும் புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அடுத்து, புண்ணிய காலங்களில் தானம் செய்வது வசியம். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் தானம் செய்யச் சொல்லி வலியுறுத்துகின்றன சாஸ்திரங்கள். முற்காலத்தில் அரசர்கள் முதல் செல்வந்தர்கள் எல்லோருமே சமுதாயத்தில் உள்ள எளியவருக்கும், கல்விமான்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் வேதம் பயிற்றுவிப்பவர்களுக்கும் தானங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இது நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் நாளைய நம் சந்ததியினருக்கும் பலன்களைத் தரக்கூடியது என்பது ஐதீகம்!

‘‘பசு, பூமி, தானியங்கள், ஆபரணங்கள், உணவு போன்றவற்றை தானமாகக் கொடுத்தனர். இளநீர் ஓட்டிலோ அல்லது பூசணிக்காயிலோ ஒரு துளையிட்டு அதில் முழுவதும் நவரத்தினங்களை நிறைத்து வைத்தும் தானம் செய்துள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு, நம் தகுதிக்கேற்ப, தானம் வழங்கலாம்.

மாசி மக நன்னாளான நாளைய தினம் (19.2.19)  உணவு தானம் செய்யுங்கள். ஆடை தானம் வழங்குங்கள். வயதானவர்களுக்கு போர்வை முதலானவற்றை தானமாக வழங்குங்கள். வாழையடி வாழையென வம்சம் தழைக்கும்; சிறக்கும் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x