Published : 18 Sep 2014 02:47 PM
Last Updated : 18 Sep 2014 02:47 PM

அப்பர் போற்றிய அருகர்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் திருநாவுக்கரசர் என்கிற அப்பர். அவர் தன் வாழ்வின் முற்பகுதியில் தருமசேனர் எனும் பெயருடன் சமண சமயத்தவராக இருந்தார். பின் சைவ மதத்திற்கு மாறி திருஞானசம்பந்தருடன் பல சிவத் தலங்களைத் தரிசித்தார்.

அப்பருக்கு மரியாதை

ஒருநாள் அப்பர் கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள திருநறுங்கொண்டை கிராமத்தை அடைந்தார். அவ்வூரிலிருந்த ஜைனர்கள் அவரை அன்புடன் வரவேற்று அவர் அகிம்சையைப் போதிப்பதால் அவர் மீது அன்பும் மரியாதையும் அதிகம் என்றனர். அப்பர் அகம் மகிழ்ந்து, அந்த ஊரில் உள்ள ஜைனக் கோயிலைக் காணச் சென்றார்.

அங்கு குற்றங்களில்லான் குணத்தால் நிறைந்தான் அருகன் பார்சுவநாதரைக்கண்டு, “நற்றமிழ்சேர் நறுங்கொண்டை யருகாவுன்னை நம்பினேன் நின்பதத்தை நல்குவாயே” எனப் பதிகங்களைப் பாடினார். இதனால் சமணர்கள், உம்மை அருகர் ஆட்கொண்டார் என்று கருதுகிறோம் எனக்கூறி, பார்சுவநாதரை “அப்பரை ஆண்டவர்’ என புகழ்ந்தனர். இன்றும் அக்கடவுளை அப்பாண்டநாதர் என்றே வழிபடுகின்றனர்.

சம்பந்தரும் “ஆதியே திருநறுங்கொண்டை வடதிருமலை மேல்அப்பனே அடியேனையும் அஞ்சல் என்றருளே” எனப் பதிக்கங்களைப் பாடினார். அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, “தவத்தவ முனிவர்தாள் பணிந்தேத்திய பவப்பிணி போக்கிடும் பாரீசநாதா” என்கிறார்.

இயற்கையே உருவாக்கிய கோவில்

இக்கோயில் மலை மீது உள்ளது. மேலே செல்லுமுன் தொடக்கத்திலுள்ள சேத்திரபாலகரை வணங்கி படியேறுகின்றனர் அன்பர்கள். கீழே சனிபகவான் உள்ளார். இது இயற்கையே உருவாக்கிய கோயில்போல் இருக்கிறது. இரு பெரும் பாறைகள் கிழக்கும் மேற்குமாய் எதிரேதிரே நின்று உச்சியில் இணைந்துள்ளன. கிழக்குப் பாறையில் உட்பகுதியின் கீழே அப்பாண்டநாதர் அணியா அழகராக, மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.

மேலும் பகவான் சந்திரநாதர், பத்மாவதி அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. சுனை ஒன்றும் உள்ளது. பல முனிவர்கள் தவமிருந்த குகையும் கற்படுக்கைகளும் கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு குணபத்திர முனிவர் என்பவர் ‘வீர சங்கம்’ நிறுவி கல்வித் தொண்டு செய்துள்ளார். அப்பரும் சம்பந்தரும், இவரையும் வீரசங்கத்தையும் போற்றிப் பாடி உள்ளனர். கம்பர் ராமாயணத்திற்கு வீரசங்கத்தின் அங்கீகாரம் பெற்றார் என்ற நம்பிக்கை உண்டு.

குணபத்திரர், சூடாமணி நிகண்டுத் தந்த மண்டலபுருடரின் குரு ஆவார். அப்பாண்டநாதர் உலா, திருமேற்றிசை அந்தாதி, திருநறுங்கொண்டை தோத்திரமாலை ஆகியவை இக்கோயிலைப் பற்றிய நூல்களாகும்.

ஆதரித்த அரசர்கள்

ஒரு சமயம் வேடன் ஒருவன் மண் மூடியிருந்த பகுதியில் தோண்டும்போது அப்பாண்டநாதரின் திருவுருவம் தெரியவர, சோழர் கோயில் கட்டினார் என்கின்றனர். சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர், பல சிற்றரசர்கள் இக்கோயிலை ஆதரித்துள்ளனர்.எனவே இக்கோயிலுக்கு நீண்ட நெடுங்கால அரசியல் வரலாற்றுப் பின்னணி உள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி பரமஜினதேவர் என்பவரால் கட்டப்பெற்றது. இவர் பெயரில் கள்ளகுளத்தூர் எனும் கிராமத்தில் கற்பாறை மீது பாதங்கள் உள்ளதால் இருவரும் ஒருவரோ எனக் கருதப்படுகிறது.

இத்தலத்தின் வரலாற்றைப் புலவர் மு.சண்முகம்பிள்ளை அவர்களும் முனைவர் ஏ.ஏகாம்பரநாதன் அவர்களும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்கள். திருநறுங்கொண்டை அப்பாண்டநாதர் கோயில் என்றும் சமணர்களுக்குப் புண்ணிய இடமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x