Last Updated : 22 Dec, 2018 11:34 AM

2  

Published : 22 Dec 2018 11:34 AM
Last Updated : 22 Dec 2018 11:34 AM

உத்தரகோசமங்கை அற்புதங்கள்!

உத்தரகோச மங்கை எனும் தலம், சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்தரகோசமங்கை எனும் புண்ணிய திருத்தலம். இந்த மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் முதலான முக்கியமான தலங்களில் இந்தத் தலமும் குறிப்பிடத் தக்கது!

  புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த அற்புதமான இந்தத் தலம் குறித்து ஏராளமான தகவல்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

   உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

  சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஏராளமான நிலங்களும் ஆடுகளும் மன்னர் வழங்கி திருப்பணிகள் செய்தார் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன!

 உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று பெருமையுடன் சொல்கிறது புராணம். மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல் புராணங்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இந்தத் தலத்தில்தான் நடந்தது என்று வரலாற்று ஆய்வாளும் தெரிவிக்கின்றனர்.

 உத்தரகோச மங்கை கோயிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

 இந்த தலம் சிவபுரம், தட்சிண கயிலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா க்ஷேத்திரம் பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு உள்ளது என்றும் அதற்கான கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் இந்தப் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறார்கள்.

  மூலவருக்கு மங்களநாதர் எனும் திருநாமம். மங்களேஸ்வரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள், மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி என அழைக்கப்படுகிறாள்.

 ஸ்ரீமங்களேஸ்வரியைப் போற்றும் வகையில் வ.த. சுப்ரமணியம்  பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901&-ம் ஆண்டு வெளியான அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

 ஸ்ரீராமர் வழிபட்ட ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் உள்ளது. ராவணனைக் கொன்ற தோஷத்தில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விமோசனம் பெறுவதற்காக, ராமேஸ்வரத்தில் வழிபட்டார் என்கிறது அந்த ஆலயத்தின் தல புராணம். இங்கே, உத்தரகோசமங்கையில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தத் தலம் ராமாயண காலத்தைய கல்வெட்டு என கருதப்படுகிறது.

 இந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

 சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான்தான் விசேஷம். இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

  கோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர் என்பது வித்தியாசமான அமைப்பாக விளங்குகிறது. அதேபோல், முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம்’ எனும் புராதனமான நூல் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்!

  சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் ‘இலவந்திகைப் பள்ளி’  என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது அற்புதம்!

 மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்பு கொண்ட தலம் எனும் பெருமையும் உத்தரகோசமங்கைக்கு உண்டு. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று சிவனார் போற்றப்படுகிறார் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  இந்தத் தலத்தில் சுவாமியை அம்பாள் அனுதினமும் பூஜை செய்வதாக ஐதீகம்! சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரைக்கு வந்ததாக மதுரைப் புராணம் தெரிவிக்கிறது.

 குறிப்பிட்ட காலம் வரை, இந்தத் தலம் ஆதிசைவர்கள் வசமிருந்ததாம்! பிறகு  ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருவதே இதற்குச் சாட்சி!

 உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாளிகள் கொள்ளை அழகு. சிற்ப நுட்பத்துக்கு சாட்சி. அதில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும். சிற்பிகளின் ரசனையே ரசனை!

 இத்தலத்து கோயில் குளத்தில் வாழும் மீன்கள் கடல்நீரில் வாழும் மீன்கள் என்பதும் வியப்பு சேர்க்கிறது.

  பொதுவாக, தாழம்பூவை பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

 இங்கு ஆதிகாலத்து வராகி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் வராஹியை வழிபட்டால், தீராத பிரச்னைகள், திருமண்த்தடை போன்றவை விலகும்! ஆக, அந்தக் காலத்திலேயே வராஹி வழிபாடு இங்கே இருந்திருக்கிறது எனப் புலப்படுகிறது!

  டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதக்கல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

  காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இங்கு ஞான உபதேசம் பெற்றனர் என்கிறார்கள்.

  இங்கே, ஸ்ரீமங்களநாதர் சன்னதி, மங்களேஸ்வரி சன்னதி, மரகதக்கல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே மிக நேர்த்தியான கட்டுமானத்துடனும் சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது!

  காரைக்கால் அம்மையாரும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார். உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள்.

 இங்கே வருடந்தோறும் சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்ஸவம், ஆனி மாதம் பத்துநாள் விழா, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி  திருவாதிரை விழா மாசி மகாசிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள். இந்த விழாக்காள் குறைவின்றி நிகழவேண்டும் என அந்தக் காலத்தில் நிவந்தங்களும் நிதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

  மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

 11 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சிவனாரை பிராகாரமாகச் சுற்றி வரும் போது மகாலட்சுமியை வழிபடலாம்.  ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை என அற்புதங்களும் ஆச்சரியங்களும் கொண்ட திருத்தலம் இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x