Last Updated : 29 Nov, 2018 05:16 PM

 

Published : 29 Nov 2018 05:16 PM
Last Updated : 29 Nov 2018 05:16 PM

காற்றில் கீதங்கள் 08: ஈசா.. சபேசா.. சர்வேசா

சிவபெருமான் அன்பிற்கு அடிபணிவான். செருக்குற்றவரைச் சீறி அழிப்பான். அடியவரைக் காக்கும் பொருட்டு எதனையும் செய்யும் அருள் மிக்கவன். அடியும், முடியும் காண மாட்டாது அரற்றிய திருமாலும் பிரமனும் சிவன் பெருமை உணர்ந்து அவனைப் போற்றித் துதித்து மகிழ்ந்தனர்.

காலம் தவறாது உயிர்களைக் கொல்லும் எமன், மார்க்கண்டேயன் உயிரை எடுக்க முயன்ற போது, தன்னை சரண் அடைந்த மார்க்கண்டேயனுக்காக எமனையே உதைத்த கால்களை உடையவன் என்று ஒரு பாடலில் சிவனின் பெருமையைப் பாடியிருப்பார் காரைக்கால் அம்மையார்.

ராகதாள சொரூபம்

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் நீ இறைவா போற்றி என துதிக்கப்படும் இறை சொரூபம் சிவன். சிவ பெருமையை, ஆடல்வல்லானின் சிறப்பை எத்தனையோ அருளாளர்கள் பாடியிருக்கின்றனர். சிவனை நாதவடிவாக தாள வடிவாக நம்மை தரிசிக்கவைக்கும் ஒரு புகழ்பெற்ற சம்ஸ்கிருத கிருதியை இசை, நாட்டிய உலகுக்கு அளித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.

சிவபெருமானின் சிறப்பை ஏகாந்த ரூபத்தின் பெருமையை விளக்கும் இந்தப் பாடலை, இந்தத் தலைமுறையினர் விரும்பும் வகையில் சகோதரிகள் லக் ஷ்மி ரத்தீஷ் - ராதிகா வேணுகோபால் பாடியிருக்கின்றனர் .

பேஸ் கிதார் அடிநாதம்

தம்புராவின் ஸ்ருதியில் நாபிக் கமலத்தில் காத்திரமான ஸ்தாயியில் போ.. சம்போ எனத் தொடங்கும் பாடல், ஆரோகண கதியில் வளர்ந்து உச்சத்தைத் தொடும். அதன்பின் மீண்டும் மந்திர ஸ்தாயியில் முடியும் தோற்ற அமைப்புடன் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் சுவாமி தயானந்த சரஸ்வதி.

கர்னாடக இசை மேடையாக இருந்தாலும் சரி நடன அரங்கமாக இருந்தாலும் சரி, இந்தப் பாடல் இடம்பெறாத மேடையே இருக்காது. ரேவதி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை சகோதரிகள் லக் ஷ்மியும் ராதிகாவும் பதச் சேதம் ஏற்படாமல், அதே சமயம் பேஸ் கிதார், டிரம்ஸ், ரிதம்பேட் என மேற்கத்திய வாத்தியங்களின் உறுத்தலில்லாத இசையுடன் வழங்கியிருக்கின்றனர். பாடலுக்கேற்ற மேற்கத்திய இசைக் கற்பனைகளை அசுவத்தாமன் சிவன் மிகவும் நேர்த்தியோடு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x