Last Updated : 07 Aug, 2014 12:00 AM

 

Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

நூற்றாண்டைக் கடந்தும் தொடரும் தெய்வீகப் பணி

நூற்றாண்டைக் கடந்த பரசுராம கனபாடிகள் (1914-ம் ஆண்டு பிறந்தவர்) வேதத்தில் `கனம்’ முறையைக் கற்றுத் தரும் பணியை இன்றும் செய்துகொண்டிருக்கிறார். அம்பத்தூரில் ஸ்ரீயாக்ஞவல்க்ய குருகுலத்தை அமைத்து, இன்றும் வேத மாணவர்களுக்கு சுக்ல யஜூர் வேத `கனம்’ முறையில் பயிற்சி அளித்துவருகிறார்.

இவரது குரு ப்ரம்மஸ்ரீ இஞ்சிக் கொல்லை சிதம்பர கனபாடிகள். விசாலாட்சி அம்மாள் மற்றும் வெங்கடராம ஐயர் ஆகியோரின் புதல்வரான பரசுராமர் கனபாடிகளின் வேதக் கல்விக்கு வழிகாட்டியவர் காஞ்சி மகா பெரியவர்.

கனம் சொல்வதில் வல்லவரே கனபாடிகள். இதற்கு மிகுந்த ஞாபக சக்தி தேவை. முதல் வரியில் வரும் மூன்று பதத்தை எண்ணிக்கையில் சேர்த்துச் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்று எடுத்துக் கொண்டு கனம் போல் கூற வேண்டுமென்றால், முதல் முறை சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்று கூற வேண்டும், இரண்டாம் முறை சுக்லாம் பரதரம் பரதரம் விஷ்ணும் என்று எண்ணிக்கை மாறுபாடு கொள்ளும்.

சுருதி, ரிதம், தாளம் ஆகியவற்றோடு இயைந்து வேத பதங்கள் அமைக்கப்படும். புத்தகத்தைப் பாராமல் நினைவிலிருந்து மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டும். நூற்றியோராவது வயதில் இத்தகைய முறையில் வேத பாராயணம் செய்வதே பெரிய விஷயம். இவரோ அதைக் கற்றுத்தரவும் வல்லவராக இருக்கிறார் என்பது அபூர்வம்.

அம்பத்தூரில் உள்ள இந்த குருகுலத்தில் இந்த நூற்றியோரு வயதிலும் விடியற்காலையிலேயே வேத வகுப்புகளைத் தொடங்கிவிடுகிறார் பரசுராம கனபாடிகள்.

வேதமும், கன பாராயணமும் கற்ற இவரது வேதப் பணியைப் போற்றும் விதமாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரைக் கெளரவித்துள்ளது. பாரதீய வித்யா பவன் இவருக்கு ‘வேத ரத்ன புரஸ்கார்’ விருது அளித்துள்ளது. காஞ்சி மகா பெரியவர் ‘பிரம்ம ரிஷி’ என்று இவரை அழைத்தார். இவற்றுடன் சேர்த்து இருபத்திரண்டு

விருதுகள் பெற்றுள்ளார். வேத சாத்திரத்தைப் பேணிப் பாதுகாத்துவரும் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளும், சங்கங்களும் இவரைக் கெளரவித்துள்ளன.

இவரது கையெழுத்துப் பிரதியான சதபத ப்ராம்மணத்தை சாந்தீபனி ராஷ்டிரிய வேத வித்யா பிரதிஷ்டான் புத்தகமாக, வெளியிட்டுள்ளது. வேதம் குறித்த பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ள இவர், வேதத்தின் அங்கங்களான பத, க்ரம, ஜட, சதபத ப்ராம்மணம், பூர்வ, அபர பிரயோகம், சம்ஹித ஹோம பதாதி ஆகியவற்றை சமஸ்கிருத மொழியில் ஐயாயிரம் பக்கங்களுக்கு மேல் அச்சுப் பதித்தாற்போல் கைகளால் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லூரில் இருந்தபோது இவரது கையெழுத்துப் பணி தொடங்கியது என்று கூறிய இவரது 94 வயதான மனைவி லஷ்மி, அப்பொழுதெல்லாம் மின்விளக்கு கிடையாது, திண்ணையில் கொசு வலைக்குள் அமர்ந்துகொண்டு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் இரவு ஒரு மணி வரை வேதத்தை எழுதிக் கொண்டிருப்பார் என்று நினைவுகூர்ந்தார். அந்த உழைப்பும் அதற்குப் பின்னாலுள்ள ஈடுபாடும் இன்றளவும் குறையவில்லை இந்தத் தம்பதியரிடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x