Published : 09 May 2025 05:17 AM
Last Updated : 09 May 2025 05:17 AM

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

விமரிசையாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், | படங்கள்: நா.தங்கரத்தினம் |

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். 8-ம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 9-ம் நாளான புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயமும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, 10-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.

திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று அதிகாலை கோயிலை வந்தடைந்தனர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடக்காடி வீதி - மேற்காடி வீதி சந்திப்பில் 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார். பின்பு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காலை 7.58 மணிக்கு மேடையில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் 8.04 மணியளவில் மேடையில் எழுந்தருளினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க விநாயகர் பூஜை, ஹோமத்துடன் திருக்கல்யாண நிகழ்வு தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்குக் காப்பு கட்டப்பட்டது. காலை 8.43 மணியளவில் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்க்கும் வைபவமும், தொடர்ந்து மாலை மாற்றும் வைபவமும் நடந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.

காலை 8.51-க்கு சுந்தரேசுவரரிடமிருந்து பெற்ற மங்கல நாணை மீனாட்சி அம்மனுக்கு சிவாச்சாரியார் அணிவிக்க திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணத்தில் பங்கேற்ற சுமங்கலிகள், தங்கள் திருமாங்கல்யக் கயிறை புதிதாக மாற்றிக் கொண்டு மனம் உருக வேண்டிக்கொண்டனர்.

திருக்கல்யாண உற்சவம் முடிந்தவுடன் சுவாமியும், அம்மனும் காலை 9.35 மணிக்குப் புறப்பட்டு பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

மணக்கோலத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்த மீனாட்சி அம்மன்.

தொடர்ந்து நேற்றிரவு யானை வாகனத்தில் சுவாமியும், ஆனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 6.30 மணிக்கு அம்மனும், சுவாமியும் வலம் வரும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 12-ம் நாள் விழாவாக தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கோயில் மற்றும் சித்திரை, ஆவணி, மாசி வீதிகள் என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தளிக்கப்பட்டது.

திருக்கல்யாண விழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

கள்ளழகர் நாளை புறப்படுகிறார்: இதற்கிடையே, சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 12-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். இதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் நாளை (சனி) மாலை மதுரைக்குப் புறப்படுகிறார். நாளை மறுதினம் (ஞாயிறு) மாலை மூன்றுமாவடி அருகே எதிர்சேவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x